இலங்கையில்
ஏழுநாட்கள்
=================
கீரிமலை– நகுலேஸ்வரம்*
அடுத்த நாங்கள் சென்ற இடம் கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்.
ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும். .உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின் வடபகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது.
நகுலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் என்னும் பெயர்களும் இத் திருத்தலத்துக்கு உண்டு. இராவணன், இலங்காபுரியை ஆட்சிசெய்த காலத்தில், இவ்வாலயம் மிகச் சிறப்பாக விளங்கியதாகக் கைலாசபுராணம் என்ற நூலிலே கூறப்பட்டுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது
புராதனப் பெருமை வாய்ந்த இத் திருத்தலத்தின் ஆலயத்தோற்றம் மிகவும் அற்புதமானது. கர்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிருத்தமண்டபம், பரிவார தேவர் கோயில்கள், கோபுரவாயில், கோயில்பிரகாரம் என்னும் அமைப்புக்களுடன் இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயில் சிவாகமவிதிகளுக்கும், சிற்பசாத்திர முறைகளுக்கும் அமையவே உருவாக்கப் பட்டிருந்தது.
இக் கோயில், ஆதிகாலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் வாழ்ந்துவந்த நகுலேசப் பாசுபதர்களினால் அமைக்கப்பட்டதென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். (ஆனால், ஆதிகாலத்துக் கோயில் 1621ம் ஆண்டு, போர்த்துக்கேய ஆட்சியாளர்களால் முற்றிலுமாக இடித்து அழிக்கப்பட்டது.
மேலும், அந்த ஆதிக் கோயிலில் இருந்த கருவறைத் திரு உருவச் சிலைகளும் மற்றும் வழிபாட்டுப் பொருட்களும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாமல் மறைந்து போயின. இக் காரணங்களால், கீரிமலைச் சிவன் கோயிலைப் பற்றிய முழுமையான உண்மை வரலாற்றை அறிய முடியவில்லை.
எனினும், அந்த ஆதிகாலம் தொட்டு மக்களிடையே வழிவழியாகப் பரவிவந்த வரலாற்றுக் கதைகளிலிருந்தும், பிற கோயில்களின் வரலாற்று ஏடுகளில் இருந்தும், முந்திய ஆட்சியாளர்கள் எழுதிவைத்த பதிவேடுகளிளிருந்தும் இக் கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது. இக் கோயிலின் அதிசய வரலாற்றைப்பற்றி, யாழ்ப்பாணம் மயில்வாகனப்புலவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். முற்காலத்திலே, நகுல முனிஎன்னும் ஒரு முனிவர் இருந்தார். அவரது முகம் கீரியின் முகத்தைப்போன்று காட்சியளித்ததால், மக்கள் யாவரும் அவரைப் பழித்ததுடன், யாரும் அவருடன் பேசவும் அஞ்சினார்கள்.மக்களின் பழிப்புக்கு அஞ்சி, உலகையே வெறுத்த ஒரு துறவியாகி, ஒதுங்கி வாழ்ந்து வந்தார். அவர் அப் பகுதியிலுள்ள மலைச் சாரலிலே சில காலம் தங்கியிருந்து, தீர்த்தமாடி வந்தபோது, இறைவன் அருளாலும், அந்தத் தீர்த்தத்தின் மகிமையாலும் அவரது கீரி முகம் நீங்கி, இயல்பான மனித முகம் அவருக்கு உண்டானது. அதனால், அந்தத் தலமும், அந்தக் கடற்கரைத் தீர்த்தமும் தெய்வீக அருள் பெற்றவை என்பதை உணர்ந்த அந்த முனிவர், அங்கேயே நிரந்தரமாகத் தங்கித் தவம் புரியத் தீர்மானித்தார்.
அவருக்கு, அந்தத் தலத்திலே கீரி முகம் மாறியதால், அந்தத் தலத்துக்குக் கீரிமலை என்று பெயர் உண்டாயிற்று. அந்த முனிவரின் தெய்வீகமான புகழ் ஊரெங்கும் பரவியது. அவரை வணங்கி, அவரது ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, திரளான பக்தர்கள் அங்கே வந்து, கீரிமலைத் தீர்த்த்தத்தில் நீராடி, அவரை வழிபட ஆரம்பித்தார்கள்.
அதைக்கண்டு, அவ்வூர் அரசன் மக்கள் வழிபடுவதற்கு உகந்ததொரு அழகான சிவன் கோயிலை அங்கே கட்டுவித்தான். அந்தக் கோயிலின் ஈஸ்வரன் திருத்தம்பலேஸ்வரர் என்றும், அம்பாள் திருத்தம்பலேஸ்வரியம்பாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆயினும், கீரிமுகம் கொண்ட முனிவரின் பெயரால், அந்தத் தலத்தை மக்கள் நகுலேசர் கோயிலென்றும், அம்பாள் கோயிலை நகுலாம்பிகையம்மன் கோயிலென்றும் அழைத்தார்கள். (நகுலம் = கீரி).
நகுலேஸ்வரம் யாழ்ப்பாணத்தின் மிகவும் புராதனமான தலங்களுள் ஒன்று என்பதை முன்னர் பார்த்தோம். அங்குள்ள சமுத்திர தீர்த்தமானது, அங்கு தீர்த்தமாடும் பக்தர்களுக்குப் பாவ விமோசனங்களையும், இராஜயோகம் முதலான இம்மைப் பலன்களையும் கொடுக்க வல்லது.
கீரிமலைத் தலத்தின் மகிமையை மாருதப்புரவல்லி கதை மிகவும் சுவையாக விளக்குகின்றது. தென் இந்தியாவில், சோழ தேச அதிபதியாகிய திசையுக்கிர சோழன் என்பவனுக்கு, மாருதப்புர வல்லி என்னும் மகள் இருந்தாள். அவள் முகம் மனித முகமாக இல்லாமல், குதிரையின் முகத்தைப்போல இருந்தது.
மேலும், அவளுக்குக் குன்ம வியாதி பீடித்திருந்ததால், அவளது உடல் மெலிந்து, மிகப் பலவீனமாயிருந்தாள். சோழ தேசத்திலிருந்த பிரபல வைத்தியர்கள் எவராலும், அவளைக் குணப்படுத்த முடியவில்லை. அவள் வாலிப வயதடைந்து, மணப்பருவம் எய்தியும், யாருமே அவளைத் திருமணம் செய்ய முன்வரவில்லை.
மகளின் நோயையும், கவலையையும் கண்டு, தந்தை மிக்க கவலையுற்றான். அப்போது, சாந்தலிங்கன் என்னும் ஒரு சந்நியாசி அவளைச் சந்தித்து, “மகளே, நீ இனிமேல் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய கோயில்களைத் தரிசித்து, அங்குள்ள புனித தீர்த்தங்களில் தீர்த்தமாடி வந்தால், இறைவன் அருளால் உன் நோயும், உன் தந்தையின் கவலையும் தீரும் ” என்று அறிவுரை கூறினார். அதன்படி, மாருதப்புரவல்லி தன் நெருங்கிய சில தோழிகளோடும், சில உண்மையான காவலர்களோடும் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்திலுள்ள கோயில்களை முறைப்படி தரிசித்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியும் வந்தாள். அவ்வாறே, அவள் யாழ்ப்பாணம் வந்தடைந்து, கீரிமலை நகுலேஸ்வரம் திருத்தலத்தைப் பற்றிக் கேள்வியுற்று, அங்கே வந்து சேர்ந்தாள்.அங்கே தவம் செய்துகொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கித் தன் குறைகளையெல்லாம் கூறி அழுதாள். அவளைத் தேற்றி, ஆறுதல் கூறிய நகுல முனிவர், கீரிமலைத் தீர்த்தத்தின் மகிமைகளைக் கூறி, அவளை அங்கேயே தங்கித் தீர்த்தமாடி, இறைவனை வணங்கிவருமாறு கூறி ஆசீர்வதித்தார்.
நகுல முனிவரின் ஆசிர்வாதத்துடன், மாருதப்புரவல்லி அங்கேயே தன் தோழிகளோடும், காவலர்களோடும் கூடாரம் அமைத்துத் தங்கித் தினமும் கீரிமலைத் தீர்த்தத்தில் பயபக்தியுடன் நீராடி, நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் அன்புடன் வழிபட்டு வந்தாள். இறைவனின் அருளால், சில நாட்களிலேயே அவளது குதிரை முகம் மாறி, பேரெழில் மிக்க இளம் பெண்ணுக்குரிய முகம் அமைந்தது.அவளது உடல் நோய் நீங்கி, வலிமையும், வனப்பும் பெற்றது. இதைக் கண்டு, மாருதப்புரவல்லியும், அவளுடன் வந்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, அந்த நற்செய்தியை அவளின் தந்தைக்கும், ஏனையோர்க்கும் அறிவித்துவிட்டு, மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அச் சந்தர்ப்பத்தில், கதிரைமலையிலிருந்து, உக்கிரசிங்க மகாராஜன் தன் படை பரிவாரங்களுடன் நகுலேசர் கோயிலைத் தரிசிக்க வந்தான். நகுலேசரின் சந்நிதியில், பயபக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்த மாருதப்புரவல்லியைக் கண்டான். அவளது பேரழகையும், தெய்வ பக்தியையும் கண்டு, மிக்க மகிழ்ச்சியடைந்து, நகுல முனிவரின் ஆசீர்வாதத்துடன் அங்கேயே அவளை வெகு சிறப்பாக மணம் செய்துகொண்டான். இருவரும் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்ந்து, நகுலேஸ்வரரை வாழ்நாள் முழுவதும் பக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்தனர்.
1983 ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் ஆக்ரமித்த சமயத்திலிருந்து பக்தர்களும் அர்ச்சகர்களும் சிறப்பு அனுமதியின்றி அனுமதிக்கப்படவில்லை.
அதியுயர் பாதுகாப்பு வளயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கேதாரகௌரி விரத்தின் போது கோயிலின் மேல், விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின. பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் ஆலயம் நித்திய பூசை வழிபாடுகள் இன்றி அழிவடைந்த நிலையில் காணப்பட்டது. ஆலய ஆதீனகர்த்தா நகுலேசுவரக் குருக்களினது அயராத முயற்சியின் பயனாக 2009ம் ஆண்டு முதல் ஆலயத்திற்குச் சென்றுவர அடியவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்திய அரசின் உதவியுடன் இக்கோவில் புனரமைக்கப்பட்ட்டது.
பார்பதற்கே ஒரு கம்பீரத்துடன் காட்சியளிக்கும் கோயில் இதுவாகும்.
பயணம் தொடரும்
No comments:
Post a Comment