Friday, July 31, 2026

 


அரக்கர்களை அழிப்பதில் ராமனின் நிலைப்பாடு ஒரு அலசல்....

பதிவு இரண்டு

 

 

விஸ்வாமித்திரர், ராமர் லக்ஷ்மணனை அழைத்துக்கொண்டு தாடகை வனத்தில் நுழைகிறார். அங்கு தாடகையின் வரலாற்றை விளக்கிச் சொல்லிவிட்டு, அந்த வனத்திற்குள் நுழைந்த எல்லோரையும் அவள் எப்படி கொன்று தின்றுவிடுகுகிறாள் என்பதையும் விளக்கிச் சொல்கிறார். என் உத்திரவின்படி நீ  அவளை உன் சொந்த ஆற்றல் கொண்டு  கொல்லவேண்டும்” என்று சொன்னவுடன் ராமன் ‘குருவின் சொல்லே என் கடமை” என்று சொல்கிறான். ஆனால் தாடகையை நேரில் கண்டவுடன் அவள் பெண் என்பதால் சற்று பின் வாங்குகிறான். அவளது கைகளை துண்டித்தால போதும் என்று நினைத்து அவ்வாறு செய்கிறான்.

 

விஸ்வாமித்திரர் உடனே’ “ராமா அவளைப் பெண் என்று நினைக்காதே. அவள் ஒரு பேய். பெண்ணுக்குரிய அடையாளங்கள் இருந்தாலும் பெண்மைக்குரிய மென்மை இல்லாதவள்.” என்று சொல்லிவிட்டு அவளைக் கொல்லவேண்டியதின் நியாயத்தை எடுத்துச் சொல்லிவிட்டு, கடைசியாக சொல்கிறார்.

नृशंसमनृशंसं वा प्रजारक्षणकारणात्।
पातकं वा सदोषं वा कर्तव्यं रक्षता सता।।1.25.17।।

राज्यभारनियुक्तानामेष धर्मस्सनातन:
अधर्म्यां जहि काकुत्स्थ धर्मोह्यस्या विद्यते।।1.25.18।।

 

அன்புள்ள ராமச்சந்திரா

அவளுக்கு முடிவுகாலமும்

ஆருயிர்க்கெல்லாம்

விடிவுகாலமும்

உன்னால்தான்

உண்டாகவேண்டும்

கவிஞர் வாலி

 

நான்கு வர்ணத்தவர்களின் நலனுக்காக அரசர்கள் இத்தகைய காரியங்களை செய்யவேண்டியது வரும். மக்களையும், துறவிகளையும் காப்பதற்காகக் கொடிய செயல்களையும், பழி வரக்கூடியச் செயல்களையும், பாவங்களையும் செய்தே தீரவேண்டும். ஆளப்பிறந்தவர்கள் எப்போதும் இயற்றவேண்டிய  அறம்  இது, அறத்தை நிலைபெறுத்த மறத்தை விலக்குவதே முறை” என்று  முனிவர் சொல்ல  ராமனும் குழப்பம் தெளிந்து தாடகையைச் சம்ஹாரம் செய்கிறான்.

 

ஆக விஸ்வாமித்திரரின் இந்த அறிவுரையை மனதில் வைத்துத்தான் முனிவர்வளுக்கு ராமன் வாக்களித்தான். ஆனால் சீதை ராமனின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

 

அப்போது சீதையின் கருத்துக்கு ராமன் பதிலுரைத்தான். “தேவி நீ சொன்ன வார்த்தைகள் முற்றிலும் உண்மையே. ஆனால் ஜனங்கள் வருந்தி ஐயோவென்று முறையிடுவதற்கு முன்  க்ஷத்ரியர்கள் வில்லைத் தரிக்கவேண்டும். மகரிஷிகள் அரக்கர்களுக்கு பயந்து என்னைச் சரணடையக்கூடது. அப்படி அவர்கள் செய்தால் அது வெட்கத்துக்குரிய விஷயம்  அதற்கு   முன்பாகவே அவர்களிடம் நான் சென்று “நீங்கள் என்னிடம் வரவேண்டிய தேவை இல்லை. நான் உங்களுக்கு பணி செய்யவேண்டியவன் உங்கள் எண்ணத்தை உணர்ந்து,  உங்களை துன்புறுத்தும் அரக்கர்களை மட்டும்  கொன்று உங்களைப் பாதுகாக்கிறேன் என்றுப் பிரதிக்ஞை செய்து, அதை நிறைவேற்ற வேண்டியவன். சீதே! நான் உயிரையும் விடுவேன். உன்னையும் லக்ஷ்மணனையும் கூட துறந்து விடுவேன். ஆனால் கொடுத்த வாக்கைத் தவறவிடமாட்டேன். ஆக நான் எந்த தர்மத்தை செய்ய மனதில் நினைப்பேனோ, அதையே நீயும் சங்கல்பிக்க வேண்டும்”

 

ஆக ராமனுக்கு விஸ்வாமித்திரர்  சொன்னதே வேத வாக்கு. ஆக “யாரோடும் பகை கொள்ளலன்” என்ற ராமனின் நிலைப்பாடு இதுதான்.

 

படித்தோருக்கு நன்றி.

 

மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கிறேன்.

 

 


No comments: