Monday, July 13, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 155

 

நேற்றைய தொடர்ச்சி

 

இனிதான் இந்தப் சர்கத்தின் முக்கிய பகுதி ஆரம்பமாகிறது.பட்டி மன்ற மேடைகளில் அதிகமாக இன்று விவாதிக்கப்படும் தலைப்புக்கள் ‘இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரியா? இராமன் சீதையைத் தீக்குளிக்க வைத்தது சரியா? இராமன் சீதையை வனத்திற்கு அனுப்பியது சரியா?. நான் அவதானம் செய்த அளவில் இத்தகைய பட்டி மன்றங்கள் தமிழ் நாட்டில் மட்டும் தான் நடைபெறுகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளில் இத்தகைய விவாதங்கள் நடைபெறுவதாக இதுவரை எந்த செய்திகளோ, கட்டுரைகளோ, காணொளிகளோ நான் கண்டதில்லை. மற்ற பகுதிகளில் உள்ளோர் வால்மீகி, துளசிதாசர் ஆகியோர்  இந்த விஷயங்களில் சொல்வதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இங்கு தான் கம்பன் இதை விவாதத்திற்குரிய விஷயமாகச் சித்தரித்துள்ளான். வாலி வதத்தை துளசிதாசர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்று பார்ப்போம்

  

வாலி வதம்  

 

पुनि नाना बिधि भई लराई। बिटप ओट देखहिं रघुराई॥4

बहु छल बल सुग्रीव कर हियँ हारा भय मानि।

मारा बालि राम तब हृदय माझ सर तानि॥8

 

மீண்டும் போர் மூண்டது. எல்லா வகையிலும் வாலியும் சுக்ரீவனும் போர் புரிந்தனர். இராமன் ஒரு மரத்தின் பின் மறைந்து இருந்து அவர்கள் யுத்தம் செய்வதைக் கவனித்து வந்தான். சுக்ரீவன் முடிந்த அளவு சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் போர் புரிந்தான் இறுதியில் பயந்து போய் மனமுடைந்து போனான். அத்தருணம் கண்டு  இராமன் வாலியின் மார்பைக் குறிவைத்து பாணத்தைத் செலுத்தினான்.

 

பலவிதங்களில் नाना बिधि போரிட்டனர் என்று துளசிதாசர் சாதரணமாகச் சொல்லிவிட்டார். ஆனால் இதையே வால்மீகி விரிவாகச் சொல்லியுள்ளார்/

 

 

वृक्षैः शाखैः शिखरैः वज्र कोटि निभैः नखैः || -१६-२८

मुष्टिभिः जानुभिः पद्भिः बाहुभिः पुनः पुनः |

तयोः युद्द्धम् अभूत् घोरम् वृत्र वासवोः इव || -१६-२९

 

விருத்திரனையும், வாசவனையும் {இந்திரனையும்} போன்ற அவ்விருவரும் விருக்ஷங்களையும் {மரங்களையும்}, சாகைகளையும் {கிளைகளையும்}, சிகரங்களையும், வஜ்ர முனைகளுக்கு ஒப்பான நகங்களையும், முஷ்டிகளையும், முழங்கால்களையும், பாதங்களையும், கைகளையும் கொண்டு மீண்டும் மீண்டும் கோரமான யுத்தத்தில் ஈடுபட்டனர் என்று வால்மீகி குறிப்பிட்டுள்ளார். 

 


படம் உதவி ஹிந்து தமிழ்திசை


No comments: