Saturday, July 11, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 153

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமன் அணிவித்த மாலை

 

कर परसा सुग्रीव सरीरा। तनु भा कुलिस गई सब पीरा॥3

मेली कंठ सुमन कै माला। पठवा पुनि बल देइ बिसाला॥

 

சுக்ரீவனின் உடலை இராமன் தடவிக் கொடுத்தவுடன்  அவன் உடல் வலி எல்லாம் அகன்று விட்டது. இப்பொழுது அவன் கழுத்தில் ஒரு பூமாலையைப் போட்டு அவனுக்குத் தைரியம் சொல்லி மீண்டும் போரிட அனுப்பினார்.

 

बल देड़ बिसाला' இங்கு இராமன் சுக்ரீவனின் உடலைத் தடவிக் கொடுத்ததன் மூலம் அவனுக்குப் போதிய பலத்தைக் கொடுத்தான்.. அதாவது வாலியுடன் சண்டையிடும் அளவிற்கு சமமான பலத்தைக் கொடுத்தான். வாலியைவிட அதிக பலம் வழங்கப்படவில்லை. காரணம் சுக்ரீவனே வாலியை யுத்தத்தில் கொன்றுவிட்டால் இராமனின் பிரதிஞ்ஞை என்னாகும்? मारिहों बालिहि एकाहि बान  நான் ஒரே பாணத்தில் வாலியைக் கொல்வேன் என்ற வாக்குறுதிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் அல்லவா.?

 

सुमन की माला! கஜபுஷ்பி என்ற மாலையை இலக்ஷ்மணன் சுக்ரீவனின்  கழுத்தில் அணித்தான். வால்மீகி இராமாயணத்திலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

.

गज पुष्पीम् इमाम् फुल्लाम् उत्पाट्य शुभ लक्षणाम् |

कुरु लक्ष्मण कण्ठे अस्य सुग्रीवस्य महात्मनः || -१२-३९

ततो गिरि तटे जाताम् उत्पाट्य कुसुमायुताम् |

लक्ष्मणो गज पुष्पीम् ताम् तस्य कण्ठे व्यसर्जयत् || -१२-४०

 

 

வால்மீகி இராமாயணம் மற்றும் ஆனந்த இராமாயணம் இரண்டிலும் இராமன் இலக்ஷ்மணனிடம் சுக்ரீவன் கழுத்தில்  கஜபுஷ்பி கொடியின் மாலையை  அணிவிக்கச் சொல்ல, இலக்ஷ்மணன் அவ்வாறே அணிவிக்கிறான்.

 

இங்கு ஒரு சுவாரஸ்யமான விஷயம். அந்த கஜபுஷ்பி மாலையை ஏன் இலக்ஷ்மணன் அணிவித்தான்.?  இராமன் என்ன சொன்னான் “இருவரின் உருவ ஒற்றுமையால் தான்  வாலியை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று. இராமன் விஷ்ணுவின் அவதாரம். இராமனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடிகிறதா? அதுவும் ஹனுமன் இராமனுக்கு அருகில் நிற்கிறான். ஹனுமன் இருந்தும் வாலியை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடிகிறதா? இங்குதான் அந்த சுவாரஸ்யம். ஹனுமன் இராமன் இலக்ஷ்மணன் இருவரையும் சுக்ரீவனிடம் அழைத்து வந்து இராமனுடன் சுக்ரீவனுக்கு நட்பு ஏற்படச் செய்தான். அப்போது சுக்ரீவன் இராமனுக்கு மரத்தில் இருந்து ஒரு பெரிய இலையைப் பறித்து ஆசனமிட்டு அதில் இராமனை அமரச் செய்தான். ஆனால் அருகில் நின்று கொண்டிருந்த இலக்ஷ்மணனைக் கண்டு கொள்ளவில்லை. இதைக் கவனித்த ஹனுமன் இன்னொரு இலையைப் பறித்து அதில் இலக்ஷ்மணனை அமரச் செய்தான். இதைக் கவனித்த்துக் கொண்டிருந்த இராமன் சுக்ரீவனுக்குத் தக்க சமயத்தில்  ஒரு பாடம் கற்பிக்க எண்ணினான். அந்த சந்தர்ப்பத்தை இப்போது பயன் படுத்திக் கொண்டான். சுக்ரீவனுக்கு இலக்ஷ்மணன் கஜபுஷ்பி  மாலை அணிவிக்கும்போது எப்படியும் இலக்ஷ்மணனுக்கு முன் தலை குனிந்துதான் மாலையைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அதன் மூலம் இலக்ஷ்மணனுக்குரிய மரியாதையைச் செலுத்த  வைத்தான் என்று உரையாசிரியர்கள்  தெரிவிக்கின்றனர். ஆனால் இராம சரித மானசில் அப்படி ஒரு காட்சி இல்லை. அதனால் ஹனுமான் அருகில் இருந்தும் வாலியை இராமனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

 

தொடரும்..............


No comments: