Monday, July 27, 2026

 



அன்று சொன்னது....அர்த்தமுள்ளது....

 

பதிவு ஐந்து.

 

முந்திய பதிவில் நல்லவர்களைக் காக்க அவர்களுக்குத் தீங்கிழைக்கும் கொடியவர்களை அழிப்பது ராஜதர்மம் என்ற நிலைப்பாட்டை குந்தி எடுக்கிறாள் என்று பார்த்தோம். அவள் நிலையில் அவள் சொல்வது சரி காரணம் அவள் ஹஸ்தினாபுரத்து முன்னால் அரசி.

 

ஆனால் இது போன்ற சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சீதாபிராட்டி ராமனுக்கு உபதேசம் செய்தாள்? இன்று பார்க்கலாம்.

 

வனவாசத்தின் போது ராமன், லக்ஷ்மணன். சீதை சரபங்கர் ஆசிரமத்தை அடைகின்றனர். அவரைத் தரிசனம் செய்து தங்களுக்கும் ஒரு நல்ல ஆசிரமம் வேண்டும் என்று கேட்க, சரபங்கரோ சற்று தொலைவில் சுதீக்ஷனர் என்ற முனிவர் உள்ளார். அவரிடம் சென்றால் தங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வார் என்று சொல்ல்கிறார்.  அங்கிருந்து கிளம்பும் முன் பல ரிஷிகள் ராமனைச் சந்தித்து “இராமா! நாங்கள் இங்கு பெரிதும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். கொடிய அரக்கர்களின் தொல்லைகளை எங்களால் தாங்கமுடியவில்லை. அரக்கர்கள் கொன்று குவித்த மகரிஷிகளின் எலும்புகள் இங்கு குவிந்திருப்பதைப் பார்; நாங்கள் உன்னைச் சரணடைகிறோம். எங்களைக்கப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டனர்.

 

இராமன் அவர்களைப் பார்த்து “என் தந்தையின் சொல்லைக் காப்பாற்ற கானகம் வந்தேன். இங்கு உங்களைப் பார்த்தபிறகு உங்கள் காரியமாகவும் வந்தது போல தோன்றுகிறது” என்று சொல்லி அவர்களுக்கு அபயம் அளித்தார்.

 

பிறகு முனிவர் சுதீக்ஷனரை சந்தித்து அவரை வணங்கி தங்களுக்கும் ஒரு ஆசிரமம் வேண்டும் என்று இராமர் கேட்டார். முனிவரும் அவர்களுக்கு எதிரில் இருந்த இடத்தைக் காட்டி “இங்கு எல்லா வசதிகளும் கிடைக்கும். ஆனால் மிருகங்கள், அரக்கர்களின் தொல்லை அதிகம் உண்டு” என்று சொல்ல, இராமனோ,”அதைப் பற்றி கவலை இல்லை. நான் வில்லை எடுத்து நாணேற்றிவிட்டால் எந்த விலங்கோ, அரக்கர்களோ என் கண்முன் இருக்கமாட்டார்கள். என் கூர்மையான அம்புகள் அவர்களைக் கொன்று குவித்துவிடும்” என்று சொல்லிவிட்டு முனிவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர்.

 

இராமர் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தாள் சீதை. இராமருடைய கருத்தை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவளுடைய முகம் உணர்த்தியது. இனி இராமன் மிருங்கங்களையும் அரக்கர்களையும்  கொல்ல ஆரம்பித்துவிடுவான் என எண்ணினாள்.

 

அங்கிருந்து அவர்கள் அகத்திய முனிவரைச் சந்திக்க கிளம்பினர். சீதை இராமனிடம் பேசத் துவங்கினாள்.

 

சீதை என்ன சொன்னாள்?

 

நாளை வாருங்கள்.


No comments: