Tuesday, June 30, 2026

  

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 143   

 

நேற்றைய தொடர்ச்சி

 

சுக்ரீவனிடம் போருக்குச் செல்லும் வாலியிடம் தாரை சொல்கிறாள்..

 

 “நீங்கள் எனது கணவர். என்னையும் இந்த நாட்டு மக்களையும் பாதுகாப்பவர், நீங்கள் மாயாவி, துந்துபி இவர்களுடன் சண்டையிடச் சென்றபோது நான் உங்களைத் தடுக்கவில்லை. அப்போது உங்கள் பலத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. உங்கள் நலன் கருதி  நான் கூறுவதைச் சற்றுக் கேளுங்கள்” என்று தாரை கூறினாள்

 

 

सुनु पति जिन्हहि मिलेउ सुग्रीवा। ते द्वौ बंधु तेज बल सींवा॥14

कोसलेस सुत लछिमन रामा। कालहु जीति सकहिं संग्रामा॥15

 

இதையே கம்பர் சொல்கிறார்

 

“கொற்றவரே!உங்கள் தம்பி உங்களுடைய தோளாற்றலுக்கு அஞ்சியே போர் செய்யாமல் குழைந்து கொண்டே இத்தனை காலம் பேசாமலிருந்தார். ஆனால் அவர் இப்பொழுது போரிட வந்துள்ளார். அவர் புதிய வலிமையினையும் பெறவில்லை. வேறொரு பிறவியும் எடுத்தாரிலர். அப்படியிருந்தும் அவர் தங்களுடன் போரிட வந்துள்ளாரென்றால் ஏதோ பெருந்துணை கிடைத்திருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன்” என்றாள்  தாரை.

 

அன்னது கேட்டவள்,

      'அரச!' ''ஆயவற்கு

இன் உயிர் நட்பு

     அமைந்து இராமன் என்பவன்,

உன் உயிர் கோடலுக்கு

      உடன் வந்தான்'' எனத்

துன்னிய அன்பினர்

      சொல்லினார்' என்றாள்.

 

இது துளசிதாசர்  .....

 

கோசல மன்னரின் புதல்வர்கள் இராமனும் இலக்ஷ்மணனும் சுக்ரீவனுக்கு உதவி செய்ய வந்துள்ளனர். அங்கதனுக்கு இது தெரிய வந்துள்ளது. அவன்தான் என்னிடம் சொன்னான். அவர்களைக் காலனும் வெற்றி கொள்ள முடியாது. ஆகையால் போர் வேண்டாம். நீங்கள் எங்கள் இரட்சகர். பகையை மறந்து சுக்ரீவனை அழைத்துவந்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்குங்கள். நீங்கள் இராமனிடம் சரண் அடையுங்கள் अतस्त्वं सर्वथा वैरं त्यक्त्वा सुग्रीवमानय। यौवराज्येडभिषिज्चाशु राम॑ त्वं शरणं व्रज॥  என்று வேண்டினாள்” இங்கு துளசிதாசர் कालहु जीति என்று சொல்கிறார். அதாவது தாரை யமனைப் பெருமைபடுத்துகிறாள். அதாவது காலன் எல்லோரையும் வெற்றி கொள்கிறான். ஆனால் இராம இலக்ஷ்மணன் இருவரும் அந்தக் காலனையும் வெற்றி கொள்வர். அவர்களுக்கு முன்னால் நீங்கள் எம்மாத்திரம்? என்று சொல்லவருகிறாள்.

 

தொடரும்..............

Monday, June 29, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 142 

 

நேற்றைய தொடர்ச்சி

 

சுக்ரீவனை வாலியுடன் போர் புரிய அனுப்பினான். இராமனின் வலிமையைத்  துணையாகக் கொண்டு சுக்ரீவன் வாலியின் இருப்பிடம் சென்று கர்ஜித்தான்.

 

துளசிதாசர் 'गहि कर चरन' என்று சொல்கிறார். அதாவது  வாலி சுக்ரீவனின் கர்ஜனை கேட்டு வெகுண்டெழுந்து வெளியே ஓடினான் என்று சொல்கிறார். அப்போது தாரை வந்து அவனது கால்களைப் பிடித்தாள் என்று சொல்கிறார். பொதுவாக பெண்கள் கணவனின் கைகளைத் தான் பிடிப்பது வழக்கம். அப்படிப் பிடித்துதான் தான் சொல்லவேண்டியதைச் சொல்வர். ஆனால் இங்கு வாலி கோபத்துடன் வெளியே விரைவதால் கைகளைப் பிடித்து நிறுத்துவது என்பது சாத்தியமில்லை. மேலும் வாலி தாரையிடமிருந்து எதுவும் கேட்கும் மன நிலையில் இல்லை. ஆதலால் அவனது வேகத்தைக் கட்டுப்படுத்த அவனது கால்களில் விழுகிறாள். காலில் விழுவது என்பது கடைசி ஆயுதம். காலில் விழுந்து சொல்லவேண்டியதைச் சொன்னால் கண்டிப்பாக பலன் இருக்கும் என்பது பெண்களுக்குத் தெரியும்.

 

துளசிதாசர் तब रघुपति सुग्रीव पठावा என்று சொல்கிறார். அதாவது இராமன் சுக்ரீவனை வாலியிடம் அனுப்பினார் என்று சொல்கிறார்.  இராமன் ஏன் சுக்ரீவனுடன் செல்லவில்லை. இராமன் உடன் சென்றால் வாலி இன்னும் நிறைய வீரர்களுடன் போருக்கு வருவான். இராமனுக்கு அது ஒரு கஷ்டமில்லை என்றாலும் யுத்தத்தை முன்னின்று நடத்துபவன் சுக்ரீவன் என்ற இடம் கிடைக்காது. இராமன் சுக்ரீவனுக்கு அந்தப் பெயர் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறான்..

 

சுக்ரீவனின் கர்ஜனையைக் கேட்ட வாலிக்கு கடுமையான கோபம் வந்தது. சுக்ரீவனின் குரலை அடையாளம் கண்டுகொண்டான். ரிஷ்யமுக மலையில் ஒளிந்து இருந்தவன் இப்பொழுது இங்கு வந்துள்ளான். இந்த சந்தர்பத்தை நழுவ விடக்கூடாது என்று எண்ணினான். கோபத்துடன் அரண்மனையை விட்டு வெளியே ஓடக் கிளம்பினான். அப்போது அவனது மனைவி தாரை அவனது கால்களில் விழுந்து பேச ஆரம்பித்தாள். வால்மீகி இராமாயணத்தில் வாலி இரண்டாவது முறை சுக்ரீவனுடன் மோதும் போதுதான் தாரை அவனைத் தடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது, இங்கு முதலாவது மோதலின்போதே தாரை தடுப்பதாக துளசிதாசர் எழுதியுள்ளார்.

 

தொடரும்..............


Sunday, June 28, 2026

  

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 141   

 

நேற்றைய தொடர்ச்சி

 

  இராமன் சுக்ரீவனை அழைத்துக் கொண்டு  வாலியுடன் யுத்தத்திற்குப் புறப்பட்டான்

 

 

तब रघुपति सुग्रीव पठावा। गर्जेसि जाइ निकट बल पावा॥13

सुनत बालि क्रोधातुर धावा। गहि कर चरन नारि समुझावा॥

 

 பிறகு சுக்ரீவனை வாலியுடன் போர் புரிய அனுப்பினான். இராமனின் வலிமையைத்  துணையாகக் கொண்டு சுக்ரீவன் வாலியின் இருப்பிடம் சென்று கர்ஜித்தான். வாலி அதைக் கேட்டதுமே வெகுண்டெழுந்து  விரைந்தோடி வந்தான்.. அப்போது அவனது மனைவி தாரை அவனைத் தடுத்து நிறுத்தி அறிவுறுத்தினாள்.. 

 

 

இங்கு तब रघुपति सुग्रीव என்ற பதத்தின் மூலம் என்ன சொல்லவருகிறார்? ஹிதோபதேசம் என்ற நூலில் असाधना वित्तहीना बुद्धिमन्तः सुहृत्तमा: | साधयन्त्याशु कार्याणि அதாவது ஆயுதங்கள் இல்லாமல், செல்வம் இல்லாமல் புத்திசாலிகள் தங்கள் நண்பர்கள் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். சுக்ரீவனிடம் இப்போது ஆயுதங்கள் இல்லை, ராஜ்ஜியம் இல்லை செல்வம் இல்லை ஆனாலும் இராமன் என்ற நண்பன் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் போகிறான்.. உண்மையைச் சொல்லப் போனால் இந்தச் சமயத்தில் இராமன் மற்றும் சுக்ரீவன் இருவரும் பெரிய ஆயுதங்கள் இல்லாதவர்கள், செல்வம் இல்லாதவர்கள். அவர்கள் செய்ய வேண்டிய காரியமோ பெரிது. கிஷ்கிந்தை அரியணையில் படைபலத்துடன் அமர்ந்துள்ள வாலியைக் கொன்று அரசையும், சுக்ரீவனின் மனைவியையும் மீட்டு சுக்ரீவன் வசம் ஒப்படைத்தல். இராமன் தனது தந்தைக்கு அளித்த வாக்குறுதிப்படி, இராமன் கிஷ்கிந்தை நகருக்குள் நுழைய முடியாது. இராமன் இல்லாமல் சுக்ரீவனும் வேறு படைபலம் இல்லாமல் கிஷ்கிந்தைக்குள் நுழைய முடியாது.. ஆகையால் இராமன் சுக்ரீவனை வாலியை கர்ஜித்து போருக்கு வரும்படி அறைகூவல் விடச் செய்தான். சுக்ரீவனின் கர்ஜனையைக் கேட்டால் கண்டிப்பாக வாலி வெளியே வருவான் என்பது இராமனின் எண்ணம்.

 

 

தொடரும்..............

 


Saturday, June 27, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 140  

 

 

வாலியுடன் யுத்தம்


ले सुग्रीव संग என்ற பதத்தைப் போடுகிறார் துளசிதாசர்.  அதாவது சுக்ரீவனையும் அழைத்துக் கொண்டு..... யார்? இராமன் சுக்ரீவனை அழைத்துக் கொண்டு  வாலியுடன் யுத்தத்திற்குப் புறப்பட்டான் என்கிறார். ஆக இங்கு இராமன் முதலில் வருகிறான். பிறகு சுக்ரீவன். அதாவது சுக்ரீவன் முதலில் வாலி எனது எதிரி அவன் கொlல்லப்படவேண்டியவன் என்று சொன்னவன் பிறகு வாலி எனக்கு நன்மை செய்துள்ளான் என்று சொல்ல ஆரம்பித்து விடுவான். ஆனால் இராமனுக்கு தான் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப் படவேண்டும்  என்ற நிலைப்பாடு. ஆக இனியும் தாமதித்தால் சுக்ரீவன் வாலி வதம் வேண்டாம் என்று சொல்லிவிடுவான் என்று கருதிச் சுக்ரீவனைக் கையோடு  அழைத்துக் கொண்டு கிஷ்கிந்தைக்குப் புறப்பட்டுவிட்டான் என்று சொல்ல வருகிறார் துளசிதாசர். இரண்டாவது, நண்பனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல் பட வேண்டும் என்று கருதித் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டான் இராமன். பகவத் கீதையில் சொல்லியபடி

 

यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः ।

स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते ॥21

 

இங்கு 'रघुनाथा என்ற பதப் பிரயோகம் செய்கிறார் துளசிதாசர். காரணம் ரகுவம்சத்தினர் அடைக்கலம் என்று வந்தவர்களைக் கைவிடாதவர்கள். சத்யசந்தர்கள். உயிரே போனாலும் சொன்ன  வாக்ககைக் காப்பாற்றுபவர்கள்.. இரகுகுலத்தின் தலைவன் இராமன் ஆதலால் ரகுநாதன் என்று அழைக்கிறார்.. இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். சுக்ரீவனுடன் சென்றான் இராமன் என்று சொல்கிறார் துளசிதாசர். இலக்ஷ்மணனைப் பற்றிப் பேசவில்லை. காரணம் இராமன் ஒரே பாணத்தால் வாலியைக் கொல்வதாக வாக்களித்துள்ளான்.

 

மகாபுருஷர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்தே மற்றவர்கள் தாங்களும் அவர்களைப் பின்பற்றுவார்கள்.

 

தொடரும்..............

 


Friday, June 26, 2026

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 139

 

நேற்றைய தொடர்ச்சி.............

  

இராமன் ஏன் சுக்ரீவனைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்?. சில உரையாசிரியர்கள் கூறுவதாவது . சுக்ரீவன் வாலி இறந்தவுடன் இராமனால் கிஷ்கிந்தையின் அரசனானவுடன் தான் இதுவரை கூறியதையும் இராமனின் உபதேசத்தையும் மறந்து விடுவான் என்று அறிந்துதான் சிரித்தான் என்று கூறப்படுகிறது. காரணம் அவனது அடிப்படையான வானர குணம். அரண்மணை சுகங்களைக் கண்டவுடன் எல்லாவற்றையும் மறந்துவிடுவான் என்று இராமன் தெரிந்து வைத்திருந்தான்.. தனது நிலையிலிருந்து சுக்ரீவன் திடீரென்று மாறியதும் .

 

नट मरकट इव सबहि नचावत। रामु खगेस बेद अस गावत॥12

* लै सुग्रीव संग रघुनाथा। चले चाप सायक गहि हाथा॥

 

 காக புஜண்டர் சொல்கிறார் இராமன் குரங்கை வைத்து வித்தை காட்டுபவன் எப்படி குரங்கை ஆட்டுவிக்கிறானோ அது போல ஸ்ரீ இராமன் நம் எல்லோரையும் ஆட்டுவிக்கிறான். என்று வேதங்கள் சொல்கின்றன.

 

 

கையில் வில் அம்புகளை எடுத்துக் கொண்டு சுக்ரீவனுடன் இராமன் கிளம்பினான். சுக்ரீவனிடம் இராமன் தனது மாய வலையை வீசினான் என்று சொன்னோம். இராமன் தனது நிலைப்பாட்டைச் சொல்லி கிளம்பு என்று சொன்னவுடன் எந்தவித மறு பேச்சின்றி சுக்ரீவன் வாலியுடன் யுத்தம் செய்தற்காகக் கிளம்பினான் नट मरकट इव என்று துளசிதாசர் சொல்கிறார். எல்லோரையும் ஆட்டுவிப்பன் இராமன் என்று வேதங்கள் சொல்லும்போது சுக்ரீவன் எம்மாத்திரம்? குரங்காட்டி தனது விருப்பபடி வானரங்களை ஆட்டுவிப்பது போல இராமன் தனது விருப்பபடி எல்லோரையும் ஆட்டுவிக்கிறான். குரங்குகள் குரங்காட்டி வசம் இருப்பது போல நாம்-எல்லா ஜீவன்களும்-  எல்லோரும் அந்த இறைவன் வசம் உள்ளோம்.

 

राम कीन्ह चाहहिं सोइ होई। करै अन्यथा अस नहिं कोई॥

 

இராமன் எதைச் செய்ய விரும்புகிறாரோ அதுதான் நடக்கும்.அவருக்கு எதிராக யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதாவது இராமன் என்ன எழுதியுள்ளானோ அதுதான் நடக்கும் होड़हि सोड़ जो राम राचि राखा. இராமன் தான் எல்லோருக்குமான ஒரே பெரிய கடவுள் राम रजाइ सीस सबही कें॥4

 

தொடரும்..............