Friday, February 6, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

===================

 

ஏழாம் நாள்

 

முன்னேஸ்வரம்  சிவன் கோவில்

 

ராவணன் ஆண்ட இலங்கை, தற்போது உள்ளதைப் போல மூன்று மடங்கு பெரிதாக இருந்ததாம்! ராவணன், இலங்கையின் முழுவதும் சிவாலயங்களை எழுப்பி சிவபூஜை செய்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஐந்து மிகவும் முக்கியமானவை. முன்னீஸ்வரம், கேத்தீஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்தையும் `பஞ்ச ஈஸ்வரத் தலங்கள்என்று போற்றி வழிபடுகிறார்கள் இலங்கை மக்கள். இந்தத் தலங்களைப் பற்றிய வரலாறு தமிழர்களின் சரித்திரத்துடன் நெருங்கிய தொடர்புடையது; நம் பண்பாடு, கலை, கலாசாரம், அரசியல் ஆகியவற்றைப் பேசுவது; கடல்கடந்து சென்று ஆட்சி செய்து அந்த நிலத்தைச் செழிப்பாக்கிய நம் மன்னர்களைச் சார்ந்தது.

 

இங்ஙனம் புராண - இதிகாச காலம் தொட்டு நிலைத்து நின்று, மன்னர்கள் காலத்தில் செழித்தோங்கிய ஒரு தலம்தான் முன்னீஸ்வரம். இந்த ஆலயத்தில் அருளும் ஈசன் ராவணனால் வழிபடப்பட்டவர்; அவனே இந்த ஈசனைப் பிரதிஷ்டை செய்தான் என்பாரும் உண்டு. இதன் பெருமையை எடுத்துச் சொல்லும் ராமாயண நிகழ்வு ஒன்றும் உண்டு.. சிவபக்தனான ராவணனைக் கொன்ற காரணத்தால் ராம பிரானைப் பற்றிக்கொள்ள தருணம் எதிர்பார்த்திருந்தது பிரம்மஹத்தி தோஷம். ராமபிரான் சீதாவுடன் ஆகாயமார்க்கமாக புஷ்பக விமானத்தில் பயணித்தார். பிரம்மஹத்தியும் கரிய உருவம் கொண்டு அவரைப் பின்தொடர்ந்தது. இதை ராமரும் அறிந்தார். ஓரிடத்தில் அந்தக் கரிய உருவம் அலறி மறைந்தது. இதைக் கண்டு வியந்த சீதாதேவி, அதற்கான காரணத்தைக் கேட்டாள். ராமபிரான் கீழே பூமியைக் காட்டினார். அங்கே ஒளிபொருந்திய ஒரு நந்தவனம் இருந்தது. அந்தத் தலத்தின் சாந்நித்தியமே பிரம்மஹத்தி தோஷத்தை அலறவிட்டிருக்கிறது என்பதை அறிந்து, அங்கே புஷ்பக விமானத்தை இறக்கினார்.

 

முன்னொரு காலத்தில் முனிவர்களும் தவசிகளும் சிவ வழிபாடு செய்த தலம் அது என்பதை அறிந்து, அங்கே ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமபிரான். சீதாதேவியின் உதவியுடன் சிவ பூஜை செய்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி கொடுத்து அருளினார் என்கிறது தலபுராணம். ராமர் சிவபூஜை செய்த தலங்களில், ராமேஸ்வரத்துக்கும் முந்தைய - பழைமையான தலம் முன்னேஸ்வரம் என்கிறார்கள்.. சரித்திரம் பேசும் திருக்கோயில்!

 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில், வடமேல் மாகாணத்தில் - புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது முன்னேஸ் வரம். காலத்தால் முந்தையவர் எனும் பெருமையை உடைய ஈசன் கோயில் கொண்டிருப்பதால், `முன்னை ஈஸ்வரம்எனும் திருப்பெயர் கொண்டதாம் இந்தத் தலம். அதேபோல், இங்குள்ள ஈஸ்வரனுக்கு `முன்னை நாத சுவாமிஎன்பது திருநாமம். அம்பிகைக்கு வடிவாம்பிகை என்பது திருநாமம். இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்த மன்னர்கள் பற்றிய குறிப்பு. கி.மு 543-ம் ஆண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஜயன் என்னும் மன்னன் இந்த ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தான் என்கிறது தலபுராணம்.

 

மனுநீதிச் சோழனுக்குப் பிறகு சோழ வம்சத்தில் புகழோடு விளங்கிய மன்னன் குளக்கோட்டன் எனப்படும் சோழ கங்க தேவன். இவர் இலங்கையை ஆட்சி செய்தபோது முன்னேஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரம் திருக்கோயிலைப் புனரமைத்தாராம்.

 

இலங்கை மன்னர்களின் ஒருவரான ஆறாம் பராக்கிரமபாகு சிவன் மீது பக்தி கொண்டு இந்த ஆலயத்தை மீண்டும் புனரமைத் தார். 15-ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட ஒன்பதாம் பராக்கிர பாகுவும் இந்த ஆலயத்தை மிகவும் சீர்படுத்தி முறையாக இங்கு வழிபாடுகள் நடைபெற வகை செய்தார். இந்தச் செய்திகளை `முன்னேஸ்வர மகாத்மியம்என்னும் நூல் தெரிவிக்கிறது.

 

1578-ம் ஆண்டு இலங்கை மீது படையெடுத்த போர்ச்சுக்கீசியர்கள், மூலஸ்தானம் தவிர்த்து இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கிக் கொள்ளையிட்டனர். அதன்பின் 175 ஆண்டுகள் இந்த ஆலயம் புகழ் மங்கிக் கிடந்தது. கி.பி 1745 - 1782 ம் ஆண்டு வரை இலங்கையை ஆண்ட ராஜசிங்கன் என்னும் மன்னன் இந்த ஆலய மகிமைகளை அறிந்து, மீண்டும் புத்தெழில் பெறச் செய்தான்.

 

 இத்துடன் எங்கள் பயணம் நிறைவுற்றது. ஒரு நாட்டை ஏழு நாட்களில் சுற்றிப் பார்ப்பது என்பது இயலாத காரியம்.. ஆனாலும் முக்கிய இடங்களைப் பார்த்தோம் என்ற மனத் திருப்தியுடன் விமான நிலையம் வந்தோம். இலங்கை மக்கள் தங்கள் பகுதிகளை மிகச் சுத்தமாகப் பராமரிக்கின்றனர். அந்த ஈசனும் உமையாளும் இந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு எல்லா நலன்களும் வாரி வழங்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டு என் தாய் பிறந்த மண்ணிற்கு வணக்கம் சொல்லிவிட்டு கிளம்பினேன். வணக்கம்

 

 




 









No comments: