Wednesday, February 25, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 


பதிவு எண் 29

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமனுக்கு கிடைத்த அஷ்ட சித்திகளையும் நவ நிதிகளையும் பார்த்தோம், இந்தப் பதிவில் பஞ்சமுக ஹனுமனைப் பார்ப்போம்.

 

ஹனுமனின் ஐந்து முகங்கள்

 

ஹனுமனின் 5 முகங்கள் சொல்லும் ரகசியம்! உங்களுக்குத் தெரியுமா?

 

முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான பிரம்மாவுக்கு இருந்த பெருமைகளில் ஒன்று தான் ஐந்து முகங்கள். தனக்கு ஐந்து முகங்கள் இருந்த பெருமையில் ஆணவத்தின் காரணமாக பிரம்மா தனது ஒரு முகத்தை சிவபெருமான் மூலம் பெற்ற சாபத்தினால் இழந்து நான்முகனாக வழிபடும் பெருமை இழந்த கதையும் அறிவோம்.

 

ஆனால் எந்த ஆணவமும் இல்லாமல் தெய்வங்களிலேயே பராக்கிரமிக்க அதே சமயம் பணிவுடன் விசுவாசம் மிக்க தெய்வமாக மனிதர்களின் வாழ்வியலோடு பொருந்தி எவ்வித வேறுபாடுமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தெய்வமாக வழிபடப்படுபவர் தான் ஆஞ்சநேயர் எனும் ஹனுமன். இவரும் ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபடப்படுவது சிறப்பு. அத்துடன் இவரது தனித்துவமான உருவம் குழந்தைகளிடம் கூட கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்ப்பது சிறப்பு.

 

பஞ்சமுக ஹனுமன் புராண வரலாறு:


பாதாள உலகின் வேந்தன் மயில்ராவணன். இவன், பிரம்மனைக் குறித்து தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவன்; மாயாஜாலங்கள் செய்வதில் நிபுணன். ராவணனின் கட்டளைக்கு இணங்க, ராம-லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் செய்து புறப்பட்டான்.

  

இதை விபீஷணனின் ஒற்றர்கள் மூலம் அறிந்த சுக்ரீவன், ராம- லட்சுமணரைப் பாது காக்கும்படி அனுமனிடம் கூறினார். அனுமன், ராம- லட்சுமணரை பர்ணசாலையின் உள்ளே அமர்த்தி, தன் வாலினால் பர்ணசாலையைச் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன்மீது அமர்ந்து காவல் புரிந்தார்.

  

ஆனால், மாயம் புரிவதில் வல்லவனான மயில்ராவணன், விபீஷணரின் உருவெடுத்து வந்து அனுமனிடம் அனுமதி பெற்று, வாலால் அமைக்கப்பட்ட கோட்டைக்குள் புகுந்தான். தனது மாய சக்தியால் ராம-லட்சுமணரைச் சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக் கொண்டு வெளியேறினான். பின்னர் பாதாள லோகம் வந்த மயில்ராவணன், ராம- லட்சுமணரை நிஜ உருவம் பெறச் செய்தபின் சிறை வைத்தான்.

  

சற்று நேரத்தில், ராம-லட்சுமணரைக் காணாது திகைத்தனர் வானர வீரர்கள். விபீஷணர் மயில்ராவணனின் மாய வேலையை அறிந்து எடுத்துரைத்தார். அனுமனிடம் மயில் ராவணனது இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹிராவணன் பற்றியும் எடுத்துச் சொன்னார் விபீஷணன். ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும், அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் சொன்னார்.

  

பாதாள லோகம் விரைந்தார் ஆஞ்சநேயர்,

 

தொடரும்

No comments: