துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 26
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமனுக்கு கிடைத்த அஷ்டமா சித்திகளில் சிலவற்றை நேற்று பார்த்தோம். மீதியை இன்று பார்ப்போம்.
பிரகாம்யம்
இன்னொரு உடலில் கூடுவிட்டு கூடுபாய்கிற வித்தை. வேறொரு உடலில் நுழைந்து வெளியே வரும் திறன்.. மனம் விரும்பியதை உடனே பெரும் சக்தி
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்
ஈஸத்துவம்.
எல்லாவற்றையும் சொடுக்கு நேரத்தில் நிறைவேற்றிக் கொள்வது. வாயுவின் வேகத்தில் காரியமாற்றுவது. பிறரைக் கட்டுப் படுத்தும் சக்தி
வசித்துவம்
எது செய்தாலும் வசீகரத்துடன் செய்வது. பேச்சில், செயலில் எல்லாவற்றிலும் ஈர்ப்பை உண்டாக்கும் சித்தி. நாவுக்கரசு சுவாமிகள் சமணம் துறந்து சைவம் பேணிய நிகழ்வினைத் தொடர்ந்து, கொடிய சமணர்களும் பல்லவ மன்னனும் பல்வேறு விதங்களில் சுவாமிகளை மாய்த்து விட முனைகின்றனர். முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவ, மற்றொரு முயற்சியாக சுவாமிகளை மதயானையைக் கொண்டு இடறச் செய்ய முயல்கின்றனர்.
கொடிய மதம் கொண்டிருந்த அவ்வேழமானது வழியெங்கும் பெரும் சேதத்தை விளைவித்தவாறும், இடி முழக்கமென பெருவொலி எழுப்பியவாறும், கூற்றுவனைப் போன்று சுவாமிகளை நிறுத்தியிருக்கும் நிலப் பரப்பிற்கு விரைந்தோடி வருகின்றது. சுவாமிகள் ஆனையுரி போர்த்தருளும் முக்கண் முதல்வரின் திருவடிகளையே நினைந்தவாறு நின்றிருக்கின்றார்.
எவரொருவரும் அஞ்சிப் பதறியோடும் தன்மையில் அம்மத யானை வெகுண்டு எதிரில் வர, சுவாமிகள் ஒருசிறிதும் சலனமின்றி 'அஞ்சுவது யாதொன்றுமில்லை' எனும் அற்புதப் பாமாலையொன்றினை மகிழ்வுடன் பாடுகின்றார்.
============
சுண்ணவெண் சந்தனச் சாந்தும்; சுடர்த்திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும்; வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரணேறும்; அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்; உடையார் ஓருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை!
===============
வேத முதல்வரான சிவபெருமானின் திருவடிகளையே சரணமெனப் பற்றி, மெய்யன்பையே ஒரு கொள்கையாகக் கொண்டிருந்த நாவுக்கரசு சுவாமிகளை அம்மத வேழம் வலமாய் வந்து, எத்திசையுளோரும் கண்டு வியக்குமாறு நிலத்தில் வீழ்ந்து வணங்குகின்றது, இதையே வசித்துவம் என்று சொல்கின்றனர்.
தொடரும்
No comments:
Post a Comment