Saturday, February 14, 2026

 



மகா சிவராத்திரி

சிவாலய ஓட்டம்


 

கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் எத்தனையோ சிறப்புகள். அவற்றில் குறிப்பிடத்தக்கது, சிவாலய ஓட்டம். மகாசிவராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது. இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்!

 

மேற்கூறிய பன்னிரு சிவாலயங்களும்‌, சிவாலய ஓட்டமும்‌ தோன்றுவதற்குக்‌ காரணமான கதையொன்று இப்பகுதியில்‌ வழங்குகின்றது. பாண்டவர்களின்‌ வனவாசத்தின்‌ போது அர்ச்சுனனுக்குப்‌ பாசுபதாஸ்திரம்‌ கிடைத்த மகிழ்ச்சியைக்‌ கொண்டாட தானம்‌ செய்வதாக முடிவு செய்தனர்‌. இந்நிலையில்‌ வைணவத்தை . வெறுக்கும்‌ வியாக்ரமாமுனிவருக்கு சைவமும்‌ வைணவமும்‌ ஒன்று என்பதை உணர்த்தலும்‌ பீமனின்‌ ஆனவத்தை அடக்கவும்‌ முடிவுசெய்தார்‌ கண்ணன்‌. எனவே வியாக்ர மாமுனிவருக்குத்தான்‌ முதல்‌ விருந்து படைக்க வேண்டும்‌ என்றார்‌.

 

இதைக்‌ கேட்ட பீமன்‌ அவரிருக்குமிடத்தைக்‌ கூறினால்‌ தான்‌ சென்று அழைத்து வருவதாகக்‌ கூறினான்‌. இதைக்‌ கேட்ட கண்ணபிரான்‌ பீமன்‌ கையில்‌. 12 குளிகைகளையும்‌ ஒருபிரம்பையும்‌ கொடுத்தார்‌. புரியாது விழித்த பீமனிடம்‌ “அவர்‌ முஞ்சிறைக்‌ கருகிலுள்ள முனீஸ்வரன்‌ பாறையில்‌ ' . “சிவாயநம” என்று தவமியற்றிக்‌  கொண்டிருக்கிறார்‌. அவர்‌ அருகில்‌ சென்று - “கோவிந்தா” என்று அழைக்க வேண்டும்‌. உடனே அவர்‌ கோபங்‌ கொண்டு உன்னைப்‌ பிடிக்க ஓடி வருவார்‌. நீ உன்‌ கையிலுள்ள குளிகைகளில்‌ ஒன்றைத்‌ தரையில்‌ போட்டுப்‌ பிரம்பால்‌ தட்டினால்‌ ஒரு சிவலிங்கம்‌ தோன்றும்‌. சிவலிங்கத்தைக்‌ கண்டால்‌ முனிவர்‌ வழிபடாமல்‌ வரமாட்டார்‌. அந்நேரத்திலில்‌ நீ அவர்‌ பிடியிலிருந்து தப்பித்து கொள்ளலாம்‌. இப்படியே நீ நட்டாலம்‌ வரை ஓடி வந்து விடு. அவரும்‌ உன்பின்னேயே வந்து விடுவார்‌.” என்று முனிவரை அழைக்க ஒரு எளிய வழியையும்‌ சொன்னார்‌ கன்ணபிரான்‌.

  

அதன்படியே பீமனும்‌ நடந்து முனிவரையும்‌ நட்டாலம்‌ : வரை அழைத்து வந்துவிட்டான்‌. ஆனால்‌ இறுதியில்‌ முனிவரின்‌ பிடியில்‌ பீமன்‌ அகப்பட்டுக்‌ கொண்டு விழித்தான்‌. இறுதிக்‌ கோவிலாகிய நட்டாலத்தில்‌ சிவலிங்கம்‌ சங்கர நாராயணனாகக்‌ காட்சியளித்தது. அதைக்‌ கண்ட முனிவர்‌ உண்மையை உணர்ந்‌ தார்‌. பீமனும்‌ ஆணவம்‌ அகன்றான்‌.

  

இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை நாலு  மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கி விட்டு காலில் செறுப்பு அணியாமல்  ஓட ஆரம்பிப்பர். அதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை 'கோவிந்தா, கோபாலா' என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள். நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிக்கிறார்கள். இது ஒரு பக்தி செலுத்தும் முறை. இதனால் என்ன பயன் கிட்டுகிறது என்ற எதிர்பார்ப்பைவிட வித்தியாசமாக ஏதாவது ஒரு முறையில் இறைவழி பாட்டை மேற்கொள்ளும் பக்தி உணர்வுதான் அவர்களிடம் நிறைந்திருக்கிறது.அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே இந்த சிவாலய ஓட்டம் அமைந்துள்ளது. சிவனில் லயிப்பது சிவ லயம் தரிசனம் அதுவே பிற்காலத்தில் சிவாலய தரிசனம் ஆயிற்று…!!!

 

இப்போதெல்லாம் சென்னையில் நிறைய சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் சிவராத்திரியன்று மாலை பக்தர்களை பேருந்தில் அழைத்துச் சென்று இரவு முழுவதும் சென்னையைச் சுற்றியுள்ள புராதன ஆகம சிவாலயங்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்கின்றனர்.  சென்னைவாசிகளுக்கு இதுவே சிவாலய ஓட்டம்.





No comments: