Monday, April 20, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 பதிவு எண் 83

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமன் சுக்ரீவன் சந்திப்பு 

 

जब सुग्रीवः राम कहूँ देखा। अतिसय जन्म धन्य करि लेखा॥ ६॥

सादर मिलेड नाइ पद माथा। भेंटेड अनुज सहित रघुनाथा॥ ७॥



 இராம இலக்ஷ்மணரை ஹனுமன் தூக்கி வருவதைப் பார்த்த சுக்ரீவனுக்கு நம்பிக்கையின் ஒளி தெரிந்தது. யாரால் தீங்கு வரப் போகிறது என்று நினைத்தானோ அவர்களால் நன்மை நடக்கப் போகிறது. இல்லை என்றால் ஹனுமன் அவர்களைத் தூக்கி வர மாட்டானே? இராமனைப் பார்த்த சுக்ரீவன் தான் பிறவிப் பயனை அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தான். இராமனின் உருவத்தில் லயித்து விட்டான். இராமனின் திருவடிகளில் தனது தலையை வைத்து வணங்கினான். இராமன் தம்பி இலக்ஷ்மணனுடன் சுக்ரீவனை மார்புறத் தழுவிக் கொண்டான்.

 

இங்கு துளசி தாசர் राम कहूँ देखा என்ற பதப் பிரயோகம் செய்துளார்.  ஒரு சிலர் உருவத்தால் மற்றவர்களை ஈர்த்துவிடுவர். இங்கு இராம் என்று சொல்வதன் பொருள் அதுதான். இராமனின் உருவ லாவண்யத்தைப் பார்த்தவர் அதால் ஈர்க்கப்பட்டு மேற்கொண்டு பேச இயலாதபடி நிற்பார். சுக்ரீவன் இராமனைப் பார்த்ததும் அந்த மன நிலையில் தான் இருந்தான் என்று சொல்ல வருகிறார் துளசிதாசர். இதற்கு எடுத்துக்காட்டாக இராமன் சரபங்க முனிவரின் குடிலுக்கு வந்தபோது

 

 

देखि राम मुख पंकज मुनिबर लोचन भ्रंग/

सादर पान करत अति धन्य जन्म सरभंग॥

 

சரபங்கர் இராமனின் முகம் என்னும் தாமரையைப் பார்த்தார். அப்போது அவருடைய கண்கள் என்னும் வண்டுகள் இராமனின் முகம் என்னும் தாமரையில் உள்ள தேனை அருந்திக் கொண்டிருந்தன என்று துளசி தாசர் கூறி உள்ளார். பல உதாரணங்களைக் கொடுக்கலாம்.

 

மற்றொன்று இராம இலக்ஷ்மணர்களை ஹனுமன் முதுகின் மீது தூக்கிக்கொண்டு வந்தான் இராமன் முன்னால் அமர்ந்திருப்பான். அதனால் சுக்ரீவன் முதலில் இராமரைப் பார்த்தான் என்பதற்காகவும் துளசிதாசர் அவ்வாறு சொல்லி இருக்கலாம். அடுத்து नाड़ पद नाथा என்ற பதப் பிரயோகம். ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவன் உங்களின் அடியார்களில் ஒருவன் என்று சொல்லியுள்ளான். அதை நிரூபிக்கும் விதமாக  சுக்ரீவன் தலையை மட்டும் குனிந்து இராமனுக்கு வணக்கம் செலுத்தவில்லை. கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான் என்று சொல்லுகிறார்.

 

தொடரும்


No comments: