Saturday, April 18, 2026

 


  

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 81

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமன் சீதையைக் கண்டுபிடிக்க சுக்ரீவன் உதவுவான் என்று இராமனிடம் கூறுகிறான். இங்கு ஒரு கேள்வி எழலாம். ஹனுமனுக்கு சீதை என்ற பெயர் எப்படித் தெரிந்தது?  இராமன் ஹனுமனிடம் इहाँ हरी निसिचर बैदेही  வைதேஹியை இராக்ஷசன் அபஹரித்துவிட்டான் என்றுதான் சொல்கிறான். வைதேஹிதான் சீதை என்று ஹனுமனுக்கு எப்படித் தெரிந்தது? பத்ம இராமாயணத்தில்  இராமனும் ஹனுமனும் குழந்தைப் பருவத்தில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்று சொல்லப்பட்டுள்ளது அப்போது இராமனுக்குத் திருமணம் ஆகவில்லை. ஆக அப்போதும் ஹனுமனுக்கு சீதை என்ற பெயர் தெரிய வாய்ப்பில்லை.

 

பிறகு எப்படி தெரிந்திருக்ககூடும்?

 

இங்கு உரையாசிரியர்கள் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். அதாவது துளசிதாசர் இராமாக்யா ப்ரஸ்ன रामाज्ञा प्रश्न என்ற ஜோதிட நூல் ஒன்றை எழுதி உள்ளார். அதில் நாலாவது சர்கத்தில் ஒரு சுலோகம் வருகிறது.

  

राम जनम सुभ काज सब कहत देवरिषि आइ़।

सुनि सुनि मन हनुसानके प्रेम उमंग न अमाड़॥” (२२)

 

நாரதர் இகஷ்வாகு குலத்தில் நடக்கும் பிறப்பு, உபநயனம், திருமணம் போன்ற எல்லா மங்களகரமான விஷயங்களையும் ஹனுமனுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி இருந்தார். அதனால் விதேக அரசன் ஜனகனின் மகளான வைதேகிதான் சீதை என்று தெரிய வந்து இருக்கலாம். அடுத்து ஹனுமனுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தது சூர்ய பகவான்.. சுக்ரீவனின் பாதுகாப்புக்காகவே ஹனுமனை சூரியன் நியமித்து இருந்தான். அப்பொழுது சூர்ய பகவன் ஹனுமனிடம் இராம இலக்ஷ்மனர்கள் சீதையைத் தேடி அங்கு வருவர் என்று சொல்லி இருந்தார். அதன் மூலமும் தெரிந்து இருக்கலாம். இராம  இலக்ஷ்மணர் இருவரையும் பார்த்ததும் இராமனும் வைதேகி என்று சொன்னதும் ஹனுமனுக்கு அது சீதை என்று தெரிந்திருக்கும். ஹனுமன் இராமனைப் பார்த்ததும் இவன் பிரம்மமான மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான். இவருடைய சக்தி சீதையாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்து கொண்டான்.

 

தொடரும்


No comments: