Sunday, April 12, 2026

 



 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 75

  

நேற்றைய தொடர்ச்சி..

  

देखि पवनसुत पति अनुकूला। हृदयँ हरष बीती सब सूला॥

 

இங்கு देखि என்ற பதப் பிரயோகம் செய்கிறார் துளசி தாசர். தான் அந்தண வேடத்தில் வந்ததை இராமன் ரசிக்கவில்லை போலும் அதனால் தன்மீது அவரது கருணைக் கண் படவில்லை என்று நினைத்த ஹனுமனுக்கு தன்னைக் கட்டித் தழுவி கண்ணீரால் தன்னை நனைத்து அன்பைக் காட்டிவிட்டான்  என்பதற்காக அந்தப் பதப் பிரயோகம். மாருதிக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. தன் மீது அவரது கருணைப் பார்வை விழுந்துவிட்டது அவர். தன்னை அங்கீகரித்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டார் என்று துளசிதாசர் சொல்ல வருகிறார். காரணம் இலக்ஷ்மணணைவிட உன்மீது இரண்டு பங்கு அதிக பிரியம் என்று வேறு இராமன் சொல்லிவிட்டான்.

 

பார்த்தவுடன் பவனசுதன் பணி நன்கு 

தீர்ந்திடும் துன்பம் செல்வம் பெருகுமே 

சீர்த்தி உடையார் மனம் சிந்தை மகிழுமே 

தீர்ந்திடும் துயரம் தேவர் அருளாலே 

 

இங்கு ஹனுமந்தன் என்று ஹனுமனின் பெயரை ஹனுமன் சொல்லாமலே இராமன் முன்பு சொன்னான். இப்போது பவன சுத என்று வாயுவின் புதல்வன் என்று துளசிதாசர் நமக்குச் சொல்கிறார். இப்பொழுது அவனுக்கு எல்லாத் துன்பங்களும் सूला மனதை விட்டு அகன்றன.. இப்பொழுது ஹனுமனிடம் இரண்டு விஷயங்கள் தான் மனதில் நிற்கின்றன. ஒன்று காமம் மற்றொன்று குரோதம். ஆச்சர்யம் கொள்ள வேண்டாம். இங்கு காமம் என்பது சுக்ரீவனுக்கு எப்படியாவது நாட்டைப் பெற்றுத் தரவேண்டியது. காம். . அதாவது வேலை. அடுத்து குரோதம். கோபம். எப்படியாவது வாலியை அழிக்க வேண்டிய கோபம்.

 

अनुकूलं पतिं दृष्ट्वा सन्तोषं हृदये ऽकरोत् ।

परिताप-निवृत्तिश्च मारुतिः प्राह राघवम् ॥

 

இந்த சுலோகம் ஸ்வேத இராமாயணத்தில் வருகிறது. ஹனுமன், பிராமணர் வேடத்தில் இராமன் மற்றும் இலக்ஷ்மணரை முதன்முதலாகச் சந்திக்கிறார். இராமனின் தெய்வீகத் தோற்றம், கம்பீரம் மற்றும் அனுகூலமான (நற்குணம் நிறைந்த) இயல்புகளைக் கண்டு, ஹனுமனின் மனது மகிழ்ச்சியால் நிரம்புகிறது. "பதி" (தலைவர்) என்ற வார்த்தை இங்கு இராமனை இறைவனாகவும், உயர்ந்த தலைவராகவும் குறிக்கிறது. ஹனுமன் அவர்களின் உண்மையான தன்மையை உணரத் தொடங்குகிறார்.

 

இராமனின் முன்னிலையில், ஹனுமானின் மனதில் இருந்த எல்லா துன்பங்களும் (பரிதாபம்) நீங்குகின்றன. "மாருதி" (வாயு தேவனின் மகன், ஹனுமன்) என்று அழைக்கப்படும் ஹனுமன், தனது மனதில் அமைதியும், நம்பிக்கையும் பெற்று, ராமனிடம் மரியாதையுடன் உரையாடுகிறார். இது ஹனுமனின் பக்தி மற்றும் இராமனின் தெய்வீக ஆற்றலால் அவரது மனம் அமைதி அடைந்ததைக் குறிக்கிறது.

 

தொடரும்

 


No comments: