Friday, October 24, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 352

 

நேற்றைய தொடர்ச்சி....................

 

இராமசெயத் திருப்புகழ் பாடலின் பொருள்

 

மேற்கே சில தூதுவர் தேடவும் , கிழக்கே சில தூதர் தேடவும் , வடக்கே சில தூதுவர் தேடவும் போகவேண்டு மென்று ஒவ்வொரு திசைக்கும் இவ்விரண்டு வெள்ளம் சேனை களையும் தலைவர்களையும் அனுப்பி , முகப்பொலிவு , சொல் , செய்தொழில் ஆகிய குறிப்புக்களால், தவறாமற் குறிப்புக்களை யுணரவல்ல ஹனுமானை நோக்கி , இனி , தெற்குத் திசைக்குப் போகவுரிய தூதரை விதிக்கவேண்டு மானால் , உன்னை விட வேறு யார் செல்லினும் சீதையைக் காணும் வசம் உளதாமோ ? ஆகாது; ஆதலின் , வலிமையோடு வஞ்சகமும் மிக்கவராகிய அரக்கர்க்குத் தோலாத மன வுறுதி யுடையவனும் , அலையையுடைய கடலுக்கப்பாற் செல்லவல்ல வீரனும் நீயே யென்று கூறி , அவனைத் தனியே அழைத்துத் திரு வாழியை நல்கி , பிராட்டியின் உறுப்புக்கட்கு அடையாளமும் சொல்லியருளிய பெருமாளே ; எனக்கு அரையில் உடுக்கத் துணி வேண்டும்; மிக்க பசியைத் தணிக்க உணவும் நீரும் வேண்டும் ; எள்ளின் நெய்யை ஒழுகுமாறு தேய்த்து நீரிலே மூழ்குதல் வேண்டும் ; உடலினுள் இருக்கும் நோயைப் போக்க மருந்து வேண்டும் ; படுக்க வொரு தனி வீடு வேண்டும் ; மனங்களிக்கச் சிறுபெண் வேண்டும் ; இவை முழுதுங் கிடைத்து நான் இல்லறத்தான் ஆனாலும் , மயக்கமாகிய கடலில் மூழ்கி , மரபாகத் தொடர்ந்து நீண்டு வரும் சுற்றத்தாருக்குப் பரிவுள்ளவனாகிய எனது உயிர் வீணிற் கழிந்து போகும் ; உனது அருள் நெஞ்சமும் , மெய்யறிவின் தெளிவும் , எனக்குக் கிடைக்குமாறு என்னை அழைத்திடுதல் வேண்டும் . மேற்சொல்லிய துகில் , உணவு முதலியவற்றை , நீ எடுத்துக் கொள்ளும் அந்நாளன்றி மற்றைய நாட்களில் என் துன்பம் போகுமோ ? போகாது .

 

( நீ தரவேண்டுவன அருள் நெஞ்சம் , மெய்யறிவின் தெளிவு என்பன.நீ கொள்ள வேண்டுவன , துகில் முதலிய உடலுக்கு வேண்டிய இன்பப் பொருள்கள் . இவ் விரண்டும் நின்னாலன்றி அடியேனால் செய்து கொள்ள

முடியாதவை என்பது கருத்து . )

 

 

மீண்டும் வால்மீகியிடம் வருவோம்.

 


சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க வானரங்கள் உலகம் முழுவதையும் சுற்றித் தேடும் பொழுது இராமனும் இலக்ஷ்மணனும்  பிஸ்ரவனத்தில் தங்கி இருந்தனர். அப்பொழுது இராமன் சுக்ரீவனைப் பார்த்து “சுக்ரீவ! உன் செயல் எனக்குப் பெரும் ஆச்சர்யத்தைத் தருகிறது. நான்கு திக்குகளிலும் வானரர்களை அனுப்பினாய். அவ்வாறு அனுப்பும் பொழுது , ஒவ்வொரு திசையில் ஊர்களையும், மலைகளையும், ஆறுகளையும் குறிப்பிட்டாய். உலகின் புவியியலைப் பற்றி இவ்வளவு பரந்த ஞானத்தை எவ்வாறு பெற்றாய்?” என்று ஆச்சர்யத்துடன் வினவினான்.

 


அதற்கு சுக்ரீவனின் பதில் என்ன? நாளை பார்ப்போம்..........

 


தொடரும்

 


No comments: