Thursday, October 2, 2025

 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சீதையைத் தேடல்

 

பதிவு எண்  330

 

 

வசிஷ்டர் தொடர்ந்தார், "அந்த பிராமணப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசர்கள், தொடையில் பிறந்த அக்குழந்தையிடம், "நன்மை செய்வாயாக" என்று வேண்டினர். அக்குழந்தையும் அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பினான். அந்தப் பிராமண முனிவர்களில் சிறந்தவன், தனது தாயின் தொடையைக் கிழித்துப் பிறந்ததால், இந்த உலகத்தில் ஔர்வன் (தொடையில் பிறந்தவன்) என்று அழைக்கப்பட்டான். அந்த இளவரசர்கள் தங்கள் பார்வையைப் பெற்றுச் சென்றுவிட்டனர். ஆனால் அந்த பிருகு குலத்தைச் சேர்ந்த முனிவர் ஔர்வர் இவ்வுலகத்தை வெல்ல முடிவு செய்தார். அந்த பிருகு குலத்தின் கொழுந்து, இறந்த தனது மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த முழு உலகத்தையே அழிப்பதற்காகக் கடும் தவம் இருந்தார். தனது மூதாதையர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எண்ணிய அந்த முனிவர், தனது கடும் தவத்தால், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் பாதிப்படையச் செய்தார்.(

 

தங்கள் குலத்தைச் சேர்ந்த பிள்ளை என்ன செய்கிறான் என்பதை அறிந்த பித்ருக்கள் {ஔர்வரின் மூதாதையர்கள்} அனைவரும் தங்கள் உலகங்களை விட்டு அந்த முனிவரிடம் வந்து,() "ஔர்வா, ஓ மகனே, உனது தவம் கடுமையானதாக இருக்கிறது. உனது சக்தியை நாங்கள் கண்டோம். ஓ மகனே, மூன்று உலகங்களுக்கும் நன்மையைச் செய்யக் கருதி உனது கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக.) ஓ குழந்தாய், ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்த பிருகுக்கள், கொலைகார க்ஷத்திரியர்களின் கரங்களில் அழிவையடைந்தும் பாரபட்சமின்றி இருந்தது எங்கள் இயலாமையில் அல்ல. ஓ குழந்தாய், நாங்கள் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீண்ட வாழ்நாட்களால் களைத்துப் போய், க்ஷத்திரியர்களைக் கருவியாகப் பயன்படுத்தி எங்கள் அழிவை நாங்களே விரும்பினோம்..

 

 

 

பிருகுக்கள் நிலத்துக்கடியில் பதுக்கிய செல்வம் என்பது, க்ஷத்திரியர்களின் கோபத்தைத் தூண்டி சச்சரவை உண்டாக்க ஒரு காரணமே ஆகும். ஓ பிராமணர்களில் சிறந்தவனே, எங்களுக்குத் தேவலோகத்தில் விருப்பம் உண்டானதால், அந்தச் செல்வங்களால் எங்களுக்கு யாது பயன்? தேவலோகத்தின் பொருளாளர் (குபேரன்) எங்களுக்காகப் பெரும் செல்வத்தை வைத்திருக்கிறான். எங்களை மரணம் வெல்ல முடியாது என்பதை நாங்கள் எப்போது அறிந்தோமோ, அப்போதுதான், ஓ குழந்தாய், நாங்கள் இந்தச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம். தற்கொலை செய்பவர்கள் அருளப்பட்டவர்களின் உலகத்தை அடையவே முடியாது. இதை உணர்ந்த நாங்கள் தற்கொலை எண்ணம் கொள்ளவில்லை. எனவே, எதை நீ செய்ய விரும்புகிறாயோ, அஃது எங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, மொத்த உலகத்தையும் அழிக்கும் இந்தப் பாவகரச் செயலிலிருந்து பின்வாங்குவாயாக. ஓ குழந்தாய், க்ஷத்திரியர்களையோ, ஏழு உலகங்களையோ அழிக்காதே. உனது ஆன்ம சக்திக்குக் களங்கத்தை உண்டாக்கும்வகையில் உனக்குள் இருக்கும் இந்தக் கோபத்தைக் கொல்வாயாக" என்றனர் {பித்ருக்கள்.

 

தொடரும்

No comments: