Wednesday, October 22, 2025

 


வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 350

 

நேற்றைய தொடர்ச்சி..................

...

மற்றொரு கேள்வியாவது இராமன் மரவுரி தரித்து வனத்திற்கு வந்தவனாயிற்றே அவனிடம் எப்படி மோதிரம் வந்தது? இதற்கு உரையாசிரியர் கோவிந்தராஜனார் மூன்று விதமான வ்யாக்யானங்கள் சொல்கிறார்;  ஒன்று இராமன் வனத்திற்கு கிளம்பும்போதே மோதிரத்தை பத்திரமாக தனது மரவுரியில் முடிந்து வைத்திருக்க வேண்டும். இரணடாவது இராமன் பெயர் பதித்த மோதிரத்தை வனத்திற்குக் கிளம்பும் சமயம் சீதை ஆசையாக அணிந்து கொண்டிருக்கவேண்டும். அந்த மோதிரத்தை பிற்பாடு இராமன் தனது சிறியவிரலில் அணிந்து கொண்டிருக்கவேண்டும். மூன்றாவது  ஜனகர் சீதை இராமன் திருமணத்தின்போது இராமன் பெயர் பொறித்த மோதிரத்தை சீதையைவிட்டு ஒரு பெண்ணுக்கு எப்படி திருமாங்கல்யம் முக்கியமோ, அது போல ஒரு ஆணுக்கு மனைவியால் அணிவிக்கப்பட்ட மோதிரமும் முக்கியம். ஒருவனின் மனைவி உயிருடன் அவனோடு இணைந்து இருக்கும் வரை திருமணத்தில் பரிசளிக்கப்பட்ட அந்த மோதிரத்தை அவன் கழற்றக்கூடாது. அவனை யாரும் கழற்றவும் சொல்லமுடியாது.. இராமன் வனவாசம் கிளம்பும் சமயம் தனது நகைகளைத்  தானமாகக் கொடுத்தபொழுது மோதிரத்தை மட்டும் கொடுக்கவில்லை.

 

சுந்தர காண்டத்தில் ஹனுமன் இந்த மோதிரத்தைக் சீதையின் கையில் கொடுத்ததும் கண்ணீருடன் அதைப் பார்த்தாள்


गृहीत्वा प्रेक्षमाणा सा भर्तृ कर विभूषणम्


இது சுந்தர காண்டத்தில் வருவது. அதைப் பார்த்ததும் சீதைக்கு ஒரு நம்பிக்கை தோன்றியது. இராமனிடம் மீண்டும் உணர்வு பூர்வமாக இணைந்து விட்டது போன்ற ஒரு நெகிழ்ச்சி.

 


கையிலே வந்த கனியினை நோக்கி 

மெய்யினுள் நின்ற நினைவினைத் தேக்கி 

உய்யுமா என்றென் உயிர் நிமிர் காட்சி  

செய்யனின் மோதிரம் சிந்தை புகுந்ததே.

 


ஒரு கற்பனை. சீதை அந்த மோதிரத்திடம் சொல்லுகிறாள்


 

அரக்கியின் நிழலில் அகப்பட்டேன், 

அருள்வழி காணேன், அகம்கலங்கும்! 

கரத்தில் வந்தாய், கனிவாய் மோதிரமே 

கண்ணனின் குரல் எனக் காட்சி தந்தாய்!

 

அதற்கு பதிலளித்த மோதிரம்

 


கண்ணனின் கரத்தில் நான் காத்திருந்தேன், 

காதலின் மொழியாய் உனக்கே வந்தேன். 

துயரத்தின் நடுவே துணைநீயாக, 

தூயமாய் வாழும் சிதைமாட்டாய்!

 


அதற்கு சீதையின் பதில்

 


மனம்தளர்ந்தாலும் மறவாதே நானும், 

மருகனின் நாமம் மருந்தாய் வைத்தேன். 

பிரிவின் பிணியில் பிழைத்தேன் இன்று, 

பிரகாசம் நீயே, பிழைதீர்த்தாய்!

 


ஆறுதல் கூறிய மோதிரம்


 

பிரமத்தின் சாட்சி, ப்ரேமத்தின் தூது, 

பரமன் வருவான், பயம் நீக்குவான். 

அவனது கருணை அரணாகும் உனக்கு, 

அழிவின்றி வாழ்வாய், அருள்பெறுவாய்!

 


தொடரும்..................


No comments: