Sunday, October 5, 2025

 


வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

வடவாக்னி

 

பதிவு எண் 333

 

 

இங்கு கல்கி ஆன் லைன் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையைத் தருகிறேன். இதை எழுதியவர் இந்திராணி தங்கவேல். அவருக்கும் கல்கி நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

பூமியின் மைய நெருப்புக் கோளம் குளிர்ந்துபோனால் நிகழும் விபரீதம் தெரியுமா?

 

 

நம்முடைய பூமி மூன்று பங்கு கடல் நீராலும், அதன் வட, தென் துருவங்களில் பனிக்கட்டிகளாலும், கடும் குளிராலும் சூழப்பட்டிருந்தாலும் இன்னமும் அதன் நடுப்பகுதி கடும் நெருப்பு குழம்புகளால் மையம் கொண்டிருப்பது என்கிற தகவல் நமக்கெல்லாம் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியதே. பூமியின் அந்த மைய நெருப்பு கோளமே வடவாக்னிஎன அழைக்கப்படுகிறது.

 


இந்த வடவாக்னி எப்படித் தோன்றியது என்றால் சூரியனிலிருந்து பூமி பிரிந்தபோது அதுவும் ஒரு அதிபயங்கரமான நெருப்பு கோளமாகவே இருந்தது. நாளடைவில் சூரியனைச் சுற்றி வந்த பூமியின் மேற்பரப்பு தானாகவே குளிர்ச்சி அடையத் தொடங்கியது.

 


அப்பொழுது விண்வெளியில் இருந்த பிற பனிப்பாறைகள்,  கோள்கள் பூமியை கடுமையாக மோதித் தாக்கியதால் மேடு பள்ளங்கள் உருவாகின. பூமியின் உஷ்ணத்தால் பனிப்பாறை கோள்களில் இருந்த தண்ணீர் ஆவியாகி மேக மண்டலங்களை உருவாக்கி அத்துடன் காற்று மண்டலத்தையும் உருவாக்கியது. பூமியின் அதீத வெப்பத்தினால் பனிக்கோள்கள் உருகி தண்ணீராக மாறி மாபெரும் கடல் கேணி ஆகியது.


இதனால் பூமியின் மேற்பகுதியில் உருவான நிலப்பரப்பை கடல் நீர் நான்கு புறமும் சூழ்ந்து கொண்டது. இவ்வாறு நெருப்பு கோளமாக இருந்த பூமியின் உஷ்ணம் அனைத்தும் அதன் நடுப்பகுதிக்குள் சென்று மையம் கொள்ளத் தொடங்கியது. எனவே, அக்னியே திட, திரவ, வாயு வடிவில் நம்முடைய நிலவுலகில் கலந்துள்ளதால்  இதை, ‘அக்னி மண்டலம்என்று சித்த யோக நூல்கள் அழைக்கின்றன.

 

இவ்வாறு பூமியின் உள்பகுதியில் அதன் மைய அச்சில் சுழன்று கொண்டிருக்கும் நெருப்பு கோளமே வடவாக்னிஎன்பதாகும். இப்படி பூமியின் மேற்பரப்பில் தோன்றிய பரந்த நிலப்பரப்பை வடவாக்னியின் அழுத்தத்தினால் பல கடுமையான பூகம்பங்களை (நிலநடுக்கங்களை) உருவாக்கி அதனை தனித்தனியாகப் பிரித்து வைத்தது. அவ்வாறு தனித்தனியாகப் பிரிந்த நிலப்பரப்பே 'கண்டங்கள்' ஆக மாறியது. மேலும், நாற்புறமும் நீரால் சூழப்பட்ட தீவுகளை வடவாக்னியிலிருந்து தோன்றிய எரிமலை குழம்புகளின் சீற்றங்களே உருவாக்கியது.

 

தொடரும்


No comments: