Monday, December 29, 2025

 



 

காலை வணக்கம்

 வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம் 

சம்பாதியின் வருகை           

பதிவு எண் 393

 

நேற்றைய தொடர்ச்சி.............

 

திருஞான சம்பந்தர் மயிலாடு துறையை அடுத்துள்ள புள்ளிருக்கு வேளூர் அதாவது இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை ஜடாயு, சம்பாதி இருவரும் வழிபட்டுள்ளதாக நிறைய பதிகங்கள் தேவாரம்) பாடி உள்ளார். முந்தைய பதிவில் சிலவற்றைப் பார்த்தோம். இப்பதிவில் சில பாடல்களைப் பார்ப்போம்.

 

  ========================================

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை

ஏகாய மிட்டுகந்த வெரியாடி யுறையுமிடம்

ஆகாயந் தேரோடு மிராவணனை யமரின்கண்

போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

=======================================


பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

 

 =======================================

கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப்

பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

  ==========================================

 வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளிவடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.

 

  ==========================================

திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே

அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம்

மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்

புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

  ==========================================

சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.

 


தொடரும்

No comments: