Wednesday, December 17, 2025

 




வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

சம்பாதியின் வருகை

பதிவு எண் 389

நேற்றைய தொடர்ச்சி

சம்பாதி தொடர்ந்தான் “ தோழர்களே! பார்த்தீர்களா! இம்மகத்தான பிரபாவத்தை. முனிவர், இரகுநாதன் இலட்சியத்தில் ஈடுபடும்படி கூறினார். ஈடுபட்டேன். இதோ புதிய ஜீவன் உதயமாயிற்று. என் பழைய இளமை, பராக்கிரமம், ஆண்மை அப்படியே திரும்பப் பெற்றேன். இது இராகவனின் மேன்மையால் சாத்தியமாயிற்று. ஆகவே நீங்களும் விரைந்து செயல்படுங்கள். வெற்றி உங்களுக்கே! இம்மியும் சந்தேகம் இல்லை. இதோ என் வீர்யத்தையும் சக்தியையும் அறிந்து கொள்ளும்பொருட்டு உயரப் பறந்து போகிறேன். விடையளியுங்கள். உங்களக்கு மங்களமுண்டாகட்டும்” என்று சொல்லி மின்னல் போல பறந்து மறைந்தான். வானரர்கள் அவன் பறந்து மறைந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வானரர்களுக்கு உண்டான உற்சாகம் உச்சியை எட்டியது.

இங்கு நாம் ஒரு ஆராய்ச்சியில் இறங்கும் நேரம். வால்மீகி இராமாயணம் திரேதா யுகத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன். பல்லாயிரம் ஆண்டுகளா அல்லது லட்சக் கணக்கான ஆண்டுகளா? என்பது இன்னும் விவாதப் பொருளாக உள்ளது. இராமன் முதன் முதலில் சந்தித்தபொழுது ஜடாயு தனது வரலாற்றைச் சொல்கிறான். கிட்டத்தட்ட அது உயிரனங்கள் தோன்றிய வரலாறு போல இருந்தது. அதில் ஜடாயு தன்னைப் பற்றியும் தனது அண்ணன் சம்பாதியைப் பற்றியும் குறிப்பிடுகிறான். தனக்கும் தனது அண்ணனுக்கும் இடையே சூரியனுக்கு அருகில் செல்லும் போட்டியில் ஜடாயு மயக்கமடைய அவனைக் காப்பாற்ற தனது இறகுகளை விரித்துக் கொண்டு அவனுக்கு மேல் பரந்த பொழுது தனது இறகுகள் கருகி விந்திய மலையில் விழுந்ததாகச் சொல்கிறான். ஒரு முனிவர் தன்னைக் காப்பாற்றி எட்டாயிரம் ஆண்டுகள் இராம இலக்ஷ்மண வருகைக்காக காத்திருக்கச் சொன்னபடி காத்திருப்பதாகவும் சம்பாதி சீதையைத் தேடி வந்த வானரர்களிடம் சொல்கிறான்.

ஜடாயு இராவணனுடன் செய்த யுத்தத்தில் இறக்கைகள் வெட்டப்பட்டு தண்டகாரண்யம் ஜனஸ்தானத்தில் இறந்து போகிறான். ஆனால் சங்க இலக்கியங்களில் திருமுறைகளில் ஜடாயு, சம்பாதி இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த வைதீஸ்வரன் கோயில் அதாவது புள்ளிருக்கு வேளூர் என்ற ஊரில் இருடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் எது சரி? இதில் வேறு என்ன செய்திகள் உள்ளன?

நாளை பார்ப்பபோம்.

தொடரும்

No comments: