வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சம்பாதியின் வருகை
பதிவு எண் 385
நேற்றைய தொடர்ச்சி
இச்சமயம் ஜடாயுவின் மூத்த சகோதரனாகிய ‘சம்பாதி’ தனது குகையிலிருந்து வெளியே வந்து அமர்ந்தது. வானரர்களைப் பார்த்ததும் சம்பாதிக்கு மகிழ்ச்சி. “வெகு நாளாக தேடிய உணவு தற்பொழுது எனது அதிர்ஷ்டத்தினால் அருகிலேயே எனக்கு கிட்டியுள்ளது. உண்ணாவிரதம் இருந்து வானரங்கள் மடிந்தால் நான் அவைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் புசிப்பேன்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.
அங்கதன் துயரத்தால் சஞ்சலமடைந்து ஹனுமனை நோக்கி “இப்பொழுது நாம் எவ்வளவு கோரமான விதியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் அந்தக் கொடூர உள்ளம் படைத்த கைகேயினால் வந்ததல்லவோ?
===========================================
राम लक्ष्मणयोः वासाम् अरण्ये सह सीतया |
राघवस्य च बाणेन वालिनः च तथा वधः || ४-५६-१५
राम कोपात् अशेषाणाम् राक्षसाम् च तथा वधम् |
कैकेय्या वर दानेन इदम् च विकृतम् कृतम् || ४-५६-१६
=========================================
அவள் தசரத மன்னர், ஜடாயு, வாலி ஆகியோரின் மரணங்களுக்கு காரணமானவள் அல்லவா? இப்பொழுது நம்முடைய மரணத்திற்கும் அவளே காரணம்” என்று கூறினான்..( கைகேயி இராமனை வனத்திற்கு அனுப்பாமல் இருந்தால் தசரதன் இறந்திருக்க மாட்டான். இராமன் வனம் வைத்திருக்க மாட்டான். சூர்ப்பனகைக்கு அவமானம் நிகழ்ந்திருக்காது, ஜனஸ்தானத்தில் கரன் முதலிய அரக்கர்கள் அழிந்திருக்க மாட்டார்கள். சீதை இராவணனால் கடத்தப் பட்டிருக்க மாட்டாள். ஜடாயு மரணம்/ நிகழ்ந்திருக்காது,. ஆக எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம் கைகேயி என்று சொல்கிறான் அங்கதன்)
ஜடாயுவின் மரணத்தைக் கேட்ட சம்பாதி ஆவலுடன் “வானரர்களே! தயவு செய்து எனது இளைய சகோதரனுக்கு என்ன நடந்தது சொல்லுங்கள்? சற்று முன் நீங்கள் ஜடாயுவைப் புகழ்ந்து பேசுவதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன். அதே சமயம் அவனை இழந்ததிற்கு வருத்தமும் அடைகிறேன். வானர ஸ்ரேஷ்டர்களே! வெகு காலத்திற்கு முன்பு எனது இறகுகள் சூரியனால் எரிக்கப்பட்டன. அதனால் நான் பறக்க இயலாமல் மலை உச்சியிலிருந்து கீழே இறங்க உதவி செய்வீர்களா? என்று கேட்டது.
வானரங்களுக்கு ‘சம்பாதி’ தங்களை உண்ண விரும்புமோ என்பதால் அதன்மேல் நம்பிக்கை ஏற்படவில்லை.”நாம் இறக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். இப்பெரிய கழுகிற்கு நாம் உணவாகத்தான் போனால் என்ன? நம் துயரமும் விரைவில் தீரும்” என்று நினைத்தனர்.
உடனே வானரங்கள் சிகரத்தை அடைந்து சம்பாதியை மலை அடிவாரத்திற்கு கொண்டுவந்தனர். அவ்வாறு செய்யும்பொழுது அங்கதன் இராமனுடைய கதையை நாடு கடத்தப் பட்டதிலிருந்து ஜடாயுவின் வீர மரணம் வரை எடுத்துக் கூறினான், பிறகு தனது தந்தை வாலி மற்றும் சுக்ரீவன் பற்றிய கதையையும் எடுத்துரைத்தான்.
இதற்குப் பதிலாக சம்பாதி தனது வரலாற்றைக் கூறியது.
தொடரும்..................
No comments:
Post a Comment