Thursday, December 4, 2025

 




வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

ஸ்வயம்ப்ரபை பகுதி

பதிவு எண் 376


நேற்றைய தொடர்ச்சி



இனி வால்மீகியிடம் வருவோம்..



குகையின் வெளி வந்த வானரர்கள் வெகு விரைவில் காலம் கடந்து விட்டதைக் கண்டு வியந்தனர். பின்னர் பற்பல இடங்களில் சீதையைத் தேடினர். சற்று தூரத்தில் சமுத்திரக் கரையை அடைந்தனர். தாங்கள் வந்த வேலை நிறைவேறாததால் கடற்கரை மணலில் அமர்ந்தனர்.



அங்கதன் மிகவும் கவலையுடன் இருந்தான். வீரர்களிடம் “வீரர்களே! சுக்ரீவர் சொல்லி அனுப்பிய கெடு கடந்து விட்டது. மரங்களில் மலர்களும் கனிகளும் தென்படுகின்றன. வசந்த காலம் தொடங்கி விட்டது என்பதன் அறிகுறி இது. அரசர் குறிப்பிட்ட காலம் கடந்து விட்டதால் இனி திரும்பச் செல்வதில் பயனில்லை. அவர் நம்மை என்ன செய்வாரோ என்ற பயம் என் நெஞ்சை வாட்டுகிறது. நாம் வந்த காரியமும் முடியவில்லை. அதனை முடிக்காமல் திரும்பிச்செல்வதில் அர்த்தமில்லை. நாம் காலதாமதமாயும் எடுத்த காரியத்தை முடிக்காமல் போனால் நம் அரசர் நம்மைச் சும்மா விடமாட்டார்.




==========================================

आस्मिन् अतीते काले तु सुग्रीवेण कृते स्वयम् |

प्रायोपवेशनम् युक्तम् सर्वेषाम् च वन ओकसाम् || ४-५३-१३

अप्रवृत्तौ च सीतायाः पापम् एव करिष्यति |

तस्मात् क्षमम् इह अद्य एव गंतुम् प्रायोपविशनम् || ४-५३-१५

त्यक्त्वा पुत्रन् च दारान् च धनानि च गृहाणि च |

------------------------------------------------------------------------


இப்படிப்பட்ட நிலையில் திரும்பச் செல்வதை விட உயிரை விடுவதே மேல் என்று எண்ணுகிறேன் என்றான்.



இதைக் கேட்டு சில வானர வீரர்கள், ‘அங்கதன் சொல்வது உண்மைதான். உண்மையில் நம்முடைய இளவரசர் மீது அரசருக்கு அன்பில்லை. இராமருடைய கட்டளைக்கு அடிபணிந்துதான் அவருக்கு இளவரசுப் பட்டம் கட்டி இருக்கிறார். இந்த நிலையில் சீதை இருக்கும் இடத்தை அறியாமல் நாம் திரும்பிச் சென்றால் நம்மைக் கோபிப்பார்”.


===========================================

स पूर्वम् बद्ध वैरो माम् राजा दृष्ट्वा व्यतिक्रमम् || ४-५३-१८

घातयिष्यति दण्डेन तीक्ष्णेन कृत निश्चयः |

==========================================



“அங்கதன் பெரும் தண்டனைக்குள்ளாவான். இதனை இந்த சூழ்நிலையில் இராமரும் தடுக்க மாட்டார். ஏனெனில் இராமர் சீதையிடம் பெரும் அன்புடையவர். அவர் காரியமாகத்தான் சுக்ரீவ மகாராஜா நம்மை அனுப்பியுள்ளார். அதைச் சரியாக முடிக்காமல் நாம் திரும்பச் சென்றால் அவரும் கோபம் கொள்வார். எனவே நாம் இங்கேயே இருந்து விடுவோம். திரும்பிச்செல்ல வேண்டாம்” என்றனர்.



ஹனுமனுக்கு மற்ற வானரர்கள் பேசியது பிடிக்கவில்லை. இருப்பினும் மௌனமாக இருந்தான்.. அப்பொழுது தாரன் “நண்பர்களே! கவலை வேண்டாம். திரும்பச் சென்று வீண் அபவாதத்திற்கு ஆளாவதை விட இங்கேயே இருந்து விடலாம். வேண்டுமானால் நாம் அந்த ரிஷிபிலம் குகைக்குள் சென்று தங்கிக்கொள்ளலாம். அங்கு நமக்கு வேண்டிய அளவு தண்ணீரும் ஆகாரமும் இருக்கிறது. அத்துடன் அது மாயையால் உருவாக்கப்பட்டது. எனவே இராமரோ சுக்ரீவரோ நம்மை ஒன்றும் செய்ய முடியாது” என்றான்.



தொடரும்

No comments: