Monday, May 18, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 112

 

நேற்றைய தொடர்ச்சி

  

மதங்க முனிவரின் சாபம்

 

வாலி  ஒரு சாபத்தின் காரணமாக இந்த ரிஷியமுக மலைக்கு  வருவதில்லை. இருப்பினும் மனதில் ஒரு பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றான் சுக்ரீவன்

 

இங்கு சுக்ரீவன் சாபம் என்று சொன்னது மதங்க முனிவரின் சாபம் ஆகும்.

 

 

मतंगेन तदा शप्तो हि अस्मिन् आश्रम मण्डले |

प्रविशेत् यदि वै वाली मूर्धा अस्य शतधा भवेत् || ४-४६-२२ 

 

வாலி அந்த ரிஷிய முக மலைக்குள் வந்தால் அவனது தலை நூறு துண்டங்களாகச் சிதறிப் போகும் என்பது மதங்க முனிவரின் சாபம். அது என்ன சாபம்?

 

 

ஒரு காலத்தில் எருமை வடிவம் பெற்ற துந்துபி என்ற அசுரன் தவம் செய்து, தான் பெற்ற வரத்தினால் ஆயிரம் யானைகளின் பலத்தை அடைந்தான். பெற்ற வரத்தை எப்படி பயன் படுத்துவது என்று தெரியாமல் கடல் ராஜனிடம் சென்று சண்டைக்கு அழைத்தான். கடல் ராஜனோ “உனக்குச் சமமான எதிரியுடன் சண்டை போட வேண்டும் என்னிடம் அல்ல. உனக்குச் சமமான எதிரி வடக்கே ஹிமவான் என்ற இமயமலை இருக்கிறது. அதனுடன் சண்டையிட்டு உனது வீரத்தை காட்டு” என்று அனுப்பி வைத்தார். இமயமலை வந்த துந்துபி அங்கிருந்த மலைகளை உடைத்து பாறைகளை கொம்பால் தள்ளி அட்டகாசம் செய்தான்.

 

அதனைப் பார்த்த ஹிமவான் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு “நீ ஏன் என்னுடன் சண்டைக்கு நிற்கிறாய்?. யுத்தத்தில் எனக்கு பயிற்சி கிடையாது. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் சாதுக்களுக்கும் இடம் கொடுத்து அவர்களுடன் காலம் கழித்து வருகிறேன். உனக்குச் சமமான எதிரியுடன் சண்டையிடு” என்றார். “அப்படியானால் எனக்குச் சமமான எதிரி யார் என்று கூறு இப்போதே சண்டையிட்டு அவனை வெற்றி கொள்ள வேண்டும்” என்று மூர்க்கமாகக் கத்தினான் அசுரன். இதனைக் கேட்ட ஹிமவான் “தெற்கே வாலி என்ற வானரராஜன் இருக்கிறான். அவன் தான் உனது பலத்துக்கு சமமான வீரன் அவனை யுத்தத்திற்கு அழைத்துச் சண்டையிட்டு வெற்றி பெற்று உனது பராக்கிரமத்தை காட்டு” என்றான்.

 

 

ஹிமவான் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட துந்துபி வாலியுடன் சண்டையிட கிஷ்கிந்தைக்கு வந்தான். மரங்களைத் தள்ளியும் அரண்மனைக் கோட்டையை இடித்தும் “வானரத்தின் அரசனே வாலியே! வெளியே வா! என்னுடன் யுத்தம் செய்!” என்று வாலியைச் சண்டைக்கு அழைத்து கர்ஜனை செய்தான். அந்தப்புரத்தில் உற்சாகப் பானம் அருந்திக் கொண்டிருந்த வாலி வெளியே வந்து துந்துபியிடம் {உயிரோடு இருக்க உனக்கு ஆசையிருந்தால் ஓடிப்போய் விடு” என்று எச்சரித்தான். வாலி அலட்சியமாகப் பேசியதக் கேட்ட துந்துபி கோபமாக :உனக்கு வீரியமிருந்தால் என்னுடன் யுத்தம் செய். வீண் விவாதம் வேண்டாம் நீ இப்போது அந்தப்புரத்தில் இருந்து வந்திருக்கிறாய். உற்சாக பானம் அருந்தி களைப்பாக இருக்கிறாய். களைப்பாக இருப்பவனுடன் சண்டையிடுவது பாவமாகும். காலை வரை உனக்காக காத்திருக்கிறேன். உன்னுடைய களைப்பை விட்டுப் புத்துணர்ச்சி அடைந்ததும் வா சண்டையிடுவோம் “என்றான் துந்துபி. 

 

பிறகு என்ன நடந்தது. அடுத்த பதிவில்..............

 

 

தொடரும்


No comments: