Saturday, November 8, 2025

 





வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 363


 

நேற்றைய தொடர்ச்சி ... 

 

ஹனுமன் அத் துறவியிடம் சென்று கைகூப்பி “தாங்கள் யார்? இந்தக் குகை யாருடையது? இங்கு ஏன் எல்லாம் தங்கமயமாய் இருக்கின்றன? வெகுகாலம் நீரற்ற பகுதியில் அலைந்ததால் நாங்கள் அதிக களைப்புடனும் தாகத்துடனும் இருக்கிறோம். நீங்கள் தயவு செய்து எனது கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்” என்று கூறினான்.

 

அதற்கு அத்துறவி  “நான் மேருஸாவாணி என்பவரின் மகள்.  என் பெயர் ‘சுயம்ப்ரபை” எனக்கு ஹேமா என்ற ஒரு தோழி இருந்தாள். மயன் என்னும் அரக்கன் இந்த அழகிய இடத்தை உண்டாக்கினான். (இந்த மயனின் மகள் தான் மண்டோதரி. அவளை இராவணன் மணந்து கொண்ட வரலாற்றை உத்தர காண்டம் தெரிவிக்கிறது) வாலியால் கொல்லப்பட்ட மாயாவியும் துந்துபியும் மயனின் பிள்ளைகள், மண்டோதரியின் சகோதரர்கள்). மயன் ஹேமாவின் மீதிருந்த ஆசையால் இதனை அவளுக்குக் கொடுத்தான். தற்பொழுது ஹேமா தேவ லோகம் சென்றிருக்கிறாள். இந்த இடமும் செல்வமும் அவளுடையதுதான். அவளுடைய தோழியான நான் இதனை பராமரித்து வருகிறேன். அது சரி. நீங்கள் யார்? ஒருவரும் நுழைய முடியாத இந்தக் குகைக்குள் எப்படி நுழைந்தீர்கள். எதைத் தேடிக் கொண்டு வந்தீர்ர்கள்?” என்று கேட்டாள்.

 

அதற்கு அனுமன் விரிவான பதிலை அளித்தான்.” தாயே! தசரத சக்ரவர்த்திக்கு நான்கு பிள்ளைகள். அவர்களில் மூத்தவரான இராமர் தந்தையின் கட்டளையை ஏற்றுத் தண்டகாரண்யத்திற்கு வந்திருக்கிறார்.அவருடன் அவர் மனைவி சீதையும், தம்பி இலக்ஷ்மணனும் வந்துள்ளனர், அவர்கள் ஜனஸ்தானத்தில் தங்கி இருந்தபொழுது சீதையை இராவணன் அபகரித்துக் கொண்டு  சென்று விட்டான். உடனே அவர் சுக்ரீவனின் உதவியை நாடினார். அவருடைய வீரர்களான நாங்கள் சீதையைத் தேடிக் கொண்டு புறப்பட்டோம்.  இந்த மலைக் குகையைக் கண்டோம். பசி, தாகம்  போன்றவற்றால் களைப்படைந்திருந்த நாங்கள் இதனுள் தண்ணீர் கிடைக்கும் என்று எண்ணி நுழைந்து விட்டோம். எங்கள் களைப்பைப் போக்குங்கள்” என்று கூறினான்.

 

சுயம்பிரபை தனது விருந்தாளிகளுக்கு எல்லாவித சௌகர்யங்களையும் செய்து கொடுத்தாள். ஹனுமன் அவளிடம் “உங்கள் கருணை உள்ளத்திற்கும்  நல்ல வரவேற்பிற்கும் போதுமான நன்றியைச் செலுத்த இயலாமல் உள்ளோம்.  அதற்கு பதிலாக ஏதாவது பணி இருந்தால் நாங்கள் செய்து முடிக்கிறோம்” என்று பணிவுடன்  கூறினான்.

 

சுயம்பிரபை “நான் தவத்தை மேற்கொண்டிருப்பதால் மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்பதில்லை. என்று பதிலளித்தாள்.

 

 

தொடரும்.............


No comments: