Thursday, November 6, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 361

 

 

அங்கதன் வானரர்களைப்  பார்த்து,

 


वनानि गिरयो नद्यो दुर्गाणि गहनानि च |

दरी गिरि गुहाः चैव विचिता नः समंततः || ४-४९-२

तत्र तत्र सह अस्माभिः जानकी न च दृश्यते |

तथा रक्षः अपहर्ता च सीतायाः चैव दुष्कृती || ४-४९-३

 


மிகவும் களைத்து விட்டீர்கள், என்றான். தானும் களைத்து இருந்ததால் மெதுவாகப் பேசினான். “மலைகள், நதிக்கரைகள், நுழைய முடியாத அடர்ந்த காடுகள், சமவெளிகள், மலைக் குகைகள் என்று எல்லா இடங்களிலும் தேடி விட்டோம். எங்குமே ஜானகியைக் காணவில்லை. அவளைக் கவர்ந்து கொண்டு போன இராவணனையும் காணவில்லை.  தேவ கன்னிகை போன்ற ஜனகன் மகள், எங்கு இருக்கிறாளோ?. 

 


कालः च नः महान् यातः सुग्रीवः च उग्र शासनः |

तस्मात् भवन्तः सहिता विचिन्वन्तु समंततः || ४-४९-४

विहाय तन्द्रीम् शोकम् च निद्राम् चैव समुत्थिताम् |

विचिनुध्वम् तथा सीताम् पश्यामो जनक आत्मजाम् || ४-४९-५

 


நிறைய காலமும் விரயமாகி விட்டது. சுக்ரீவன் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அதனால் திரும்பத் தேடுவோம்.  உடல் களைப்பை உதறி விட்டு, தூக்கத்தையும் அலுப்பையும் மறந்து திரும்ப எழுந்து வாருங்கள். தேடுவோம். ஜனகன் மகள் கிடைக்கும் வரை ஓய மாட்டோம்”. செயல்படுபவன், அந்தக் கர்மத்தின் {செயலின்} பலனை அவசியம் காண்பான்.  உரையாசிரியர் தர்ம கூடம் சொல்வதாவது अनेन अनिर्वेदादयः कार्य सिद्धिकारा इति उक्तम् - तथा च - भारते - उद्योगे विदुरः - अनिर्वेदः श्रियो मूलं धर्मस्य च | महान् भवति अनिर्विशान्नो भयं तथा महत् दृच्छति | - डीके மனச்சோர்வின்றி, விடாமுயற்சியுடன் செயல்படுவது தர்மத்திற்கும் செல்வத்திற்கும் அடிப்படையாகும். முயற்சி செய்யும் மனம் கொண்டவர் பயம் இல்லாமல், உயர்ந்த நிலையை அடைவார்.

 


அநிர்வேதம் செல்வத்தின் மூலமாம்,

அதுவே தர்மம் வளர்க்கும் சூழலாம்,

அஞ்சாது செய்பவன் உயரும் மேன்மையாம்,

அருளும் பெருமையும் அடையும் நன்மையாம்.


 

தன்னம்பிக்கையை இழக்காமல் இருத்தல், இதுவும், பொறுமையும், மனதில் தோல்வியை ஏற்காத தன்மையும்,  தான் சாதிப்பதற்கு தேவையானவை என்று சொல்வார்கள்.  அதனால் தான் சொல்கிறேன். வானர வீரர்களே, இன்று மறு முறை இந்த வனம், கோட்டை, நுழைய முடியாத மலையடிவாரங்கள் இவற்றில் தேடுவோம். உடல் வலியை பொருட்படுத்தாது இந்த வனத்தில் திரும்பத் தேடுவோம். நிச்சயம் நமது முயற்சிகளின் பலனை அடைவோம். 

 


सुग्रीवः क्रोधनो राजा तीक्ष्ण दण्डः च वानराः |

भेतव्यम् तस्य सततम् रामस्य च महात्मनः || ४-४९-९


 

நமது செயல்களில் பின்வாங்க இது நேரமல்ல. சுக்ரீவன் கோபக்காரன். கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அவன் அரசன்.  அவனிடம் நாம் அஞ்சித்தான் நடக்க வேண்டும். தவிர, இராமனின் கோபத்துக்கும் ஆளாவோம். உங்கள் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். நமக்கு இடப்பட்ட கடமையை  முடிக்காமல் திரும்புவதில் பலனில்லை. உங்களுக்குத் தோன்றியபடி செய்யுங்கள். வானரர்களே, உசிதம் என்றும் நம்மால் முடியும் என்றும் உங்களுக்குத் தோன்றினால், சொல்லுங்கள். நாம் ஒன்றாக இணைந்து செயல் படுவோம்” என்றான்.  

 

தொடரும்


No comments: