Friday, November 7, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 362

 


நேற்றைய தொடர்ச்சி ...

 

 உடனே காந்தமாதன்  எழுந்து அங்கதனுக்கு பதில் சொன்னான். பசியும் தாகமும் வாட்ட,,  வார்த்தை தெளிவில்லாமல் வர, சிரமப்பட்டுப் பேசினான் “அங்கதா நீ சொன்னது சரியே. இது தான் நாம் செய்ய வேண்டியது. நமக்கு நல்லது.. திரும்பவும் தேடுவோம். மலைகளையும், குகைகளையும், சமவெளிகளையும் தேடி, சூன்யமான காடுகளிலும், சுக்ரீவன் நம்மிடம் சொன்ன இடம் ஒன்று விடாமல் தேடுவோம்.  எல்லோரும் வாருங்கள்” எனவும், எல்லோருமாக எழுந்து மலைக் குகைகளில் தேடலாயினர்.

 

தென் திசையில் விந்த்ய மலைக் காடுகளில் தேடினர். ரஜத பர்வதம், சந்திரனுடைய பிரபை போன்று ஜொலித்தது. சிகரத்தில் ஏறி அதன் அடுத்த பக்கம் சமவெளியில் இறங்கினர்.  லோத்ர வனம் என்ற வனம் ரம்யமாக இருந்தது. சப்தபர்ண (ஒரு வகை மரம்) வனங்கள் வந்தன. சீதையைத் தேடிக் கொண்டே இதைக் கடந்தனர். எல்லோருமே மிகவும் களைத்திருந்தனர். ராம மகிஷியை, அவனுடைய பிரியமான மனைவியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு தான் அவர்களை நடத்திச் சென்றது.  மெதுவாக இறங்கி அந்த மலையடிவாரத்தில் ஒய்வு எடுத்துக்  கொள்ள அமர்ந்தனர். சிறிது நேரம்  இளைப்பாறிய பிறகு திரும்பவும் விந்த்ய மலைகளில் தேடக் கிளம்பினர்.

 

அனுமன், அங்கதன், தாரன்  போன்றோர் விந்திய மலையின் பல இடங்களில் சீதையைத் தேடினர். களைப்பு, சோர்வு, தாகம், பசி போன்ற கொடுமைகளை அவர்கள் மாறி மாறி அனுபவித்தனர். இருப்பினும் விடா முயற்சியுடன் தொடர்ந்து தேடினர். அந்த மலைச் சாரலில் ஏராளமான குகைகள் இருந்தன. ஒவ்வொரு குகையாகச் சென்று அனுமன் உன்னிப்புடன் தேடினான். கவயன், சரபன், கந்தமாதணன், மயிந்தன், துவிதன், ஜாம்பவான், நலன், அங்காதன் போன்றோருரும் புதர்களிலும்,பாறைகளின் இடுக்களிலும் தேடினர். எங்கும் சீதையைக் காணவில்லை.

 

இவ்வாறு இவர்கள் தேடியபொழுது ஒரு பெரிய குகையைக் கண்டனர். அதற்கு ‘ரிஷிபிலம்’ என்று பெயர். அதனை மாயன் உண்டாக்கி இருந்தான். பல இடங்களில் சீதையைத் தேடிய வானர வீரர்கள்  அங்கு வந்து ஒன்று கூடினர். பசி தாங்க முடியாமல் களைப்புடன் அங்கு உட்கார்ந்து விட்டனர்..

 

ரிஷிபிலம் என்ற அந்தக் குகையின் வாயானது செடிகளாலும் கொடிகளாலும் மூடப்பட்டு இருந்தது. அதன் உள்ளிருந்து அன்றில், அன்னம் போன்ற பறவைகள்  தண்ணீரில் நனைந்து வெளியில் பறந்து வந்து கொண்டிருந்தன. அவைகளின் உடலில் இருந்து மலர்களின் நறுமணம் தவழ்ந்து வந்தது. பசியாலும் தாகத்தாலும் தவித்துக் கொண்டிருந்த வானர வீரர்கள் இவற்றைப் பார்த்தனர். அந்தக் குகைக்குள்  தாமரைத் தடாகம் இருக்கக் கூடும் என்று கருதினர். நீர் வேட்கையைப் போக்கிக் கொள்ளலாம் என்று கருதி எல்லோரும் அந்தக் குகையினுள் செல்லத் தொடங்கினர். குகைக்குள் மெதுவாக செல்லத் தொடங்கினர். உள்ளே ஒரே இருள். வெகு தூரம் சென்றும் தண்ணீர் இருப்பதற்கான அடையாளங்களே தெரியவில்லை. தாகத்தால் தண்ணீர் தண்ணீர் என்று அலறினர். இனி பிழைக்க மாட்டோம் என்று அவர்கள் கருதிய வேளையில்  திடீரென்று ஓரிடத்தில் வெளிச்சம் தென்பட்டது. அதனை நோக்கிச் சென்ற வானரங்கள்  ஒரு தங்கமயமான அரண்மனையைக் கண்டனர். அதன் அருகில் அழகான குளங்களும் மகிழ்ச்சியை ஊட்டும் பூங்காக்களும்  அமைந்திருந்தன. அப் பூங்காக்களில் இருந்த மரங்கள் தங்கமயமாய் காட்சியளித்தன. அத்தேவ லோக தோப்பின் நடுவில் ஒரு பெண் துறவி கரிய மானின் தோலினால் செய்த உடுப்பை உடுத்தி இருந்தாள். அவளிடம் தெய்வீக அழகு ஜொலித்துக் கொண்டிருந்ததை வானரங்கள் கண்கொட்டாமல் பார்த்தனர்.

 

தொடரும்.............


No comments: