Wednesday, October 1, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சீதையைத் தேடுதல்

 

பதிவு எண் 329

 

 

நேற்றைய தொடர்ச்சி......................

 


தங்கள் பார்வையை இழந்த அந்த க்ஷத்திரியர்கள் அணுக இயலாத மலைகளில் சுற்றித் திரிந்தனர். தங்கள் பார்வையை இழந்து துன்பப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் துயரடைந்து, தங்கள் பார்வையை மீண்டும் பெறத் தீர்மானித்து, அந்தக் குற்றமற்ற பெண்மணியிடம் தஞ்சமடைந்தனர். தங்கள் பார்வை போன போது, தங்களை விட்டு ஒரு நெருப்பு வெளியேறியதை உணர்ந்த அந்த க்ஷத்திரியர்கள், துயர் நிரம்பிய இதயங்களுடன் அந்தச் சிறப்பு மிகுந்த பெண்ணிடம்.  "ஓ பெண்ணே, கருணை கொள்வாயாக. நாங்கள் எங்கள் பார்வையை மீண்டும் அடைய விரும்புகிறோம். நாங்கள் இனி அப்படிப்பட்ட தீய செயலைச் செய்யாது, எங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறோம்.. ஓ அழகானவளே, நீயும் உனது குழந்தையும் எங்களிடம் கருணை காட்டுவீராக. எங்களுக்குப் பார்வையைக் கொடுத்து, மன்னர்களான எங்களுக்கு நன்மையைச் செய்வீராக" என்றனர்".(

 

 

இப்படி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த பிராமணப் பெண், "குழந்தைகளே, நான் உங்கள் பார்வையைப் பறிக்கவில்லை. உங்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. இருப்பினும், பிருகு வம்சத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தை உங்களிடம் கோபமாக இருக்கிறான்.  தன் குலம் உங்களால் அழிந்ததை அறிந்த இந்தக் குழந்தையின் கோபத்தினால்தான் உங்கள் பார்வை பறிபோனது என்பதில் சிறு ஐயமும் கிடையாது. குழந்தைகளே, நீங்கள் பிருகு குலத்தின் கருக்களைக்கூட அழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தக் குழந்தை எனது தொடைக்குள் நூறு வருடங்கள் இருந்தான். பிருகு குலத்திற்கு வளமை உண்டாக, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதமானது, எனது கருவில் இருந்த இவனுக்கு அருளப்பட்டது. பிருகு குலத்தின் இந்தக் கொழுந்து, தனது மூதாதையர்களின் மரணத்திற்குப் பழிவாங்கவே உங்களைக் கொல்ல விரும்புகிறது! இவனது தெய்வீகச் சக்தியால் தான் உங்கள் கண்கள் பறிக்கப்பட்டன. எனவே, ஓ குழந்தைகளே, எனது தொடையிலிருந்து பிறந்த இந்த அற்புதமான குழந்தையிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அஞ்சலியின் மூலம் நிறைவடைந்த இவன் உங்களுக்குப் பார்வையை அருளக்கூடும்" என்றாள்"

 

தொடரும்

Tuesday, September 30, 2025

 

வால்மீகியின் 

கிஷ்கிந்தா காண்டம்

 

சீதையைத் தேடுதல்  

 

பதிவு எண்: 328

 

முந்தைய பதிவின்  தொடர்ச்சி.................

 


வடவாக்னியைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமா? அது எவ்வாறு உண்டானது?

 


இதற்கு ஒரு நீண்ட கதை மகாபாராதம் ஆதி பர்வத்தில் உண்டு.

 


  "கிருதவீர்யன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருவன் இருந்தான். பூமியின் மன்னர்களில் காளையான அவன், வேதமறிந்த பிருகு வம்சத்தவரின் சீடனாக இருந்தான். , அந்த மன்னன் சோம வேள்வியை முடித்து, பிராமணர்களுக்கு அரிசி மற்றும் பெரும் செல்வங்களைப் பரிசுகளாகக் கொடுத்து அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான். அப்போது, அந்த ஏகாதிபதி சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வழித்தோன்றல்களுக்குச் செல்வம் தேவைப்பட்டது. பிருகு குலத்தவர் வளமையாக இருப்பதை அறிந்த அந்த இளவரசர்கள், அந்த பிராமணர்களில் சிறந்தவர்களிடம் பிச்சைக்காரர்கள் வடிவில் சென்றனர். பிருகு வம்சத்தவரில் சிலர், தங்கள் செல்வங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்தனர், சிலர் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட அச்சத்தினால் (வேறு) பிராமணர்களுக்குக் கொடுத்தனர். பிருகு குலத்தவரில் சிலர் க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வேண்டிய அளவுக்குக் கொடுத்தனர் இருப்பினும், சில க்ஷத்திரியர்கள், ஒரு குறிப்பிட்ட பார்கவரின் இல்லத்தில் நிலத்தைத் தோண்டிப் பெரும் செல்வப்புதையலை அடைந்தனர். அப்புதையல் அங்கிருந்த க்ஷத்திரியக் காளைகளால் கண்டெடுக்கப்பட்டது.

 


பிருகு குலத்தவரின் வஞ்சகமான இந்த நடத்தையால் கோபம் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், அந்த பிராமணர்கள் தங்களிடம் கருணை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் அவர்களை அவமதித்தனர். அந்தப் பெரும் வில்லாளிகள் பிருகு வம்சத்தவரைத் தங்கள் கூரியக் கணைகளால் கொல்லவும் தொடங்கினர். உலகத்தையே சுற்றி வந்த அந்த க்ஷத்திரியர்கள், பெண்களின் கருவறையில் இருக்கும் பிருகு வம்சத்தவரின் கருவைக் கூட கொன்றனர். பிருகு வம்சம் இப்படி அழிக்கப்பட்ட போது, அக்குலத்தின் பெண்கள் பயம் கொண்டு, யாரும் அணுக முடியாத இமயத்தின் மலைகளுக்குச் சென்றனர்..

 


அவர்களில் அழகான தொடைகளைக் கொண்ட ஒருத்தி, தனது கணவனின் குலத்தைத் தழைக்க வைக்க, தனது தொடைகளில் ஒன்றில் பெரும் சக்தி கொண்ட ஒரு கருவைத் தாங்கினாள்.. இதை அறிந்த ஒரு குறிப்பிட்ட பிராமண மங்கையொருத்தி, அச்சத்தினால் பீடிக்கப்பட்டு, க்ஷத்திரியர்களிடம் சென்று உண்மையைச் சொன்னாள்.  இதையறிந்த க்ஷத்திரியர்கள் அக்கருவைக் கொல்லச் சென்றனர். அப்பெண் இருந்த இடத்திற்கு வந்த க்ஷத்திரியர்கள், பிரகாசமாக இருந்த அந்தத் தாயாகப் போகிறவளைக் கண்டார்கள். இதன்பேரில், தொடையிலிருந்த அக்குழந்தை, அவளது தொடையைக் கிழித்துக் கொண்டு, நடுப்பகல் சூரியன் போல வெளியே வந்து,  அந்த க்ஷத்திரியர்களின் கண் பார்வையைப் பறித்துத் திகைப்பூட்டினான்.


தொடரும் 

Sunday, September 28, 2025

 

வால்மீகியின் 

கிஷ்கிந்தா காண்டம்

 

இராமனின் கோபம்

 

பதிவு எண்: 327

 

நேற்றைய தொடர்ச்சி.................

 

 

இங்கு சொல்லப்படும் வடவாக்னி என்றால் என்ன?

 


கடலின் நடுவில் வடவாக்னி உள்ளது என்று புராணங்களில் கூறப்படுகின்றது. நீரும் நெருப்பும் வேறு வேறு தன்மை கொண்டவை. நீர் நெருப்பினை அணைக்கும். நெருப்பு நீரினை வற்றச் செய்யும். ஆனால் வடவாக்னியை கடல்நீர் அணைப்பதுமில்லை: வடவாக்கினியும் கடல்நீரினை முற்றும் ஆவியாக மாற்றுவதில்லை. இறைவனே வடவாக்கினியாக இருப்பதால், நீரும் நெருப்பும் ஒரே இடத்தில் இருக்க முடிகின்றது. கடல்நீர் குறிப்பிட்ட அளவினைத் தாண்டாமல் செயல்படுகின்றது என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. நீரகத்தே அழலானான் என்று வடவாக்னியாக இறைவன் இருக்கும் தன்மையும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

 


வெற்புறுத்திய திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி

மின்னின் ஒளி முத்தின் சோதி

ஒப்புறுத்த திருவுருவத்து ஒருவன் தன்னை ஓதாதே வேதம்

உணர்ந்தான் தன்னை

அப்புறுத்த கடல் நஞ்சம் உண்டான் தன்னை அமுது உண்டார்

உலந்தாலும் உலவாதானை

அப்புறுத்த நீரகத்தே அழலானானை ஆரூரில் கண்டு அடியேன்

அயர்த்தவாறே

 


தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகத்திலும் இதைப் பற்றிய குறிப்பு உள்ளது

 


ஆலேபவந்தம் மதநாங்கபூத்யா

சார்தூலக்ருத்யா பரிதானவந்தம் |

ஆலோகயே கஞ்சன தேசிகேந்தர:

மக்ஞானவாராகர பாடபாக்னிம் || 10 ||

 


மன்மதனை எரித்த சாம்பலைப் பூசிக் கொண்ட வரும், புலித்தோலைப் போர்த்திக் கொண்டவரும், அக்ஞானமாகிற ஸமுத்திரத்திற்கு வடவாக்னி போல் இருப்பவருமான ஓர் சிறந்த ஆசார்யனை தரிசிக்கிறேன்.

 


ஆதி சங்கரரின் வேதாந்த முரசிலும் வடவாக்னி பற்றிய குறிப்பு உள்ளது.

 

ஆனந்தமும், அறிவும், ஆத்மானுபவமும் நிறைந்தவன் நான்.

காணப்படும் பிரகிருதியைப் பற்றிய எண்ணத்திலிருந்து நான் வெகுதூரம் விலகியவன்.

எது அப்ராகிருதமோ அதனால் நான் என் உள்ளத்தில் மகிழ்கிறேன்.

நான் தான் உலகங்களின் ஆதி.

உபநிஷத உத்யானத்தில் விளையாடுபவன் நான்.

பொங்கி வழியும் துக்கக் கடலை வற்றச் செய்யும் வடவாக்னி நான்.

மேலும் கீழும் நாற்புறங்களிலும் என்னுடைய அதிசயமான பெருமைகளால்

நான் அனைத்தையும் வியாபித்து நிற்கிறேன்.

வாதத்தாலும் பிரதிவாதத்தாலும், ஆராய்ச்சியாலும்,

நிர்ணயிக்கப்பட்தாய் காணும் பரம புருஷன் நானே.

 

 


வடவாக்னியைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமா?  நாளை பார்க்கலாம்

 

Saturday, September 27, 2025

 


வணக்கம்

 

பல ஆண்டுகளாக முகநூலில் எனது இராமாயணத் தொகுப்புகளைப் பதிவிட்டு வந்தேன். ஆனால் முகநூல் நிறுவனம் எனது கணக்கை முடக்கி விட்டது.  இதனால் எனது பதிவுகளை இந்த பிளாக்கில் பதிவிட முடிவு செய்துள்ளேன். முகநூலில் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன். தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி..

 

 

வால்மீகியின் கிஷ்கிந்தா காண்டம்

 

இராமனின் கோபம்

 

பதிவு எண்: 326

(ஆர். சேஷாத்ரிநாதன்)


இரகுநாதன்‌ சுக்ரீவனின்‌ கெளரவமான மொழிகளைக்‌ கேட்டுச்‌ சந்தோஷம்‌ கொண்டு மெச்சி “சுக்ரிவ! உனது சுபாவமான எளிமை பூண்ட தொண்டின்‌ தன்மையைக்கண்டு உளங்களிக்கிறேன். இப்பொழுது இவர்கள் செய்ய வேண்டியது இதுதான். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா?  எங்கிருக்கிறாள்? இராவணன் எங்கிருக்கிறான்? இதைக் கண்டுபிடித்து வந்து சேரவேண்டும். இதையறிந்த பின் உன்னுடன் கலந்தாலோசித்து நடக்கவேண்டியதை முடிவு செய்வோம்”என்றான்.

 

மேலும்‌ சொன்னான்‌ “வானரேசா! இதுதான்‌ கண்டறியவேண்டிய விஷயம்‌. அவர்களுக்கு நீதான் கட்டளை இட வேண்டும் அது உனது உரிமை. நீ என்‌ நலனைக்‌ கோருபவன; நட்பை கெளரவிப்பவன்‌; பராக்கிரமசாலி; ஞானவான்‌; ஆகவே மைதிலியைத் தேடுவதிலும்‌, இராவணனின்‌ இருப்பிடத்தை அறிவதிலும்‌ எனது ஆத்திரம்  உனதே என்றறிவேன்‌ ”' என்றான்.

 

இவ்வாறு இராமன் சொன்னவுடன் சுக்ரீவன் தனது அருகில் உள்ள ‘வினதன்’ என்ற சேனாதிபதியை அழைத்தான். அவனிடன் “வீரனே! நீயும் உன்னுடைய வீரர்களும்  கிழக்கு திசையிலுள்ள  அனைத்து பகுதிகளிலும் புகுந்து சீதை மற்றும் இராவணனைக் கண்டு பிடிக்கவேண்டும். (இங்கு சுக்ரீவன் கிழக்கு என்றது, விந்த்ய மலைக்கும், இமய மலைக்கும் நடுவில் இருந்த ஆர்யாவர்த்தம் என்கிறார் உரையாசிரியர்) விரிவான பிரதேசம்‌ கிழக்கு திசையிலுள்ளது. நேரே மலைகள், நதிகள், வனங்கள், குகைகளைக் கடந்து சென்றால் அழகிய பாகீரதி,  யமுனை, ஸரஸ்வதி, சிந்து, சோணை ஆதிய இவ்வைந்து நதிகளும்‌ ஓவ்வொன்றாகத்‌ தோன்றும்‌.

 

இவைகளைக்‌ கடந்து, காலமகி, பிரும்மமாலம்‌, விதேகம்‌, மாலவம்‌, காசி, கோசலம்‌, மகதம்‌, புண்ட்ரம்‌, வங்கம்‌, கோசகம்‌ முதலிய இராஜ்யங்களைக்  கண்டு, பட்டணங்களிலும்‌, கிராமங்களிலும்‌, வனங்களிலும்‌ ஓடைகளிலும்‌ கவனித்துச்‌ சீதையைக்‌ தேடவேண்டும். ஒன்றையும் விடாது மிக்க ஊக்கத்துடனும், ஜாக்கிரதையுடனும் விரைந்து ஆழ்ந்து தேடவேண்டும். பின்பு ரஜதாகரம் என்ற கிழக்குப் பிராந்தியம் (ஜகர்தா) கிட்டும்.. இது உயர்ந்த உலோகங்கலுள்ள நாடு. மிகுந்த வளமுள்ளது. அங்கே கர்ணப்ராவணர்கள்‌, ஓஷ்டகர்‌, கோரலோமுகர்‌, ஜவனர் (யவனர்) ஏகபரதகர்‌, அ்ஷபர்‌ என்ற பலிஷ்டர்களும், புருஷாதகர்கள், கிராதர்,  கர்னசுடர்‌, ஹேமாங்கர்களும்‌ வசித்து வருவதைப்‌ பார்ப்பீர்கள்.

 

‌அங்கங்கே  கோடிக்கணக்கான அரக்க நரவியாகிரர்கள்‌ (மலைவாசிகள்‌), சிலர் தண்ணீருக்குள்ளேயே  வசிப்பவர்கள்‌;  இவர்கள்‌ இருப்பிடங்களையும்‌ துருவித் தேடவேண்டும். இதுதான் யுவத்வீபமென்பது. (ஜாவா, இந்தோனேஷியா, சயாம், மலேஷியா என்ற நாடுகள்) இந்த யுவத்வீபத்தை தேடி காணாதபோது இன்னும்‌ நேர்கிழக்கே  சிசிரமென்ற மிக உயர்ந்‌த மலை ஒன்று உண்டு. அதில் அநேக புக முடியாத குகைகள்.   அங்கே பறந்தோ, தண்ணீரில்  நீந்தியோ, மடுக்களுள்‌ மூழ்கியோ, மறைந்தோ எல்லாவிடத்தையும்‌ தேட வேண்டியது. அங்கே  மந்தேகர்கள்‌ என்று அரக்கர்களைப்‌ பல உருவங்களில்‌  காண்பீர்கள். சிறிதும் பின் வாங்காது, மனஞ்‌ சோராது, உங்கள்‌ ஆற்றலைக்‌ கொண்டு தைரியமாயும்‌, சாதுர்யமாயும்‌, மாயமாயும்‌ தேடவேண்டும்‌. சில அரக்கர்கள் மரக் கிளைகளில் தொங்குவர். (மந்தேஹர்கள் தினமும் சூரியனின் பாதையைத் தடுத்து, சூரிய உதயத்தின்போது அவனைக் கைப்பற்ற முயற்சிக்கும் உயிரினங்களாவர். அந்த நேரத்தில், காயத்ரி மந்திரமோதும் பக்தர்கள், காயத்ரிக்கு நீர்க்காணிக்கையை அளிக்கின்றனர். இந்த நீர்க்காணிக்கைகளும், காயத்ரி மந்திரத்தின் சக்தியும் சேர்ந்து மந்தேஹர்களைத் தாக்கி சூரியனின் பாதையிலுள்ள தடையை அகற்றுகின்றன. இவ்வாறு செல்லும் சூரியன் அவர்களை எரிக்கிறான். ஆனால் மந்தேஹர்கள் மீண்டும் தங்கள் உயிர்களை அடைந்து, அடுத்த நாள் காலையில் மலைச்சிகரங்களில் தொங்கி மீண்டும் சூரியனின் பாதையைத் தடுக்கத் தொடங்கி, மீண்டும் காயத்ரி மந்திரங்களாலும், நீர்க்காணிக்கைகளலும் கடலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது நாள்தோறும் தொடர்கிறது என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்))

 

இவர்களுள் புகுந்து தேடியபின்  மைதிலியைக் காணாவிடில்‌ இன்னும்‌ கிழக்கே சென்று, ஷீரோதமெனும்‌ கடலையடையுங்கள். ‌. அதன்‌ மத்தியில்‌ திவ்விய வாசனை நிரம்பிய வெள்ளிமயமான விருஷப மென்ற மலையொன்று உண்டு. பொன்மயமான சுதர்சனமெனும்‌ தடாகமூம்‌ காணப்படும். அதுதான் தேவர்களும்‌, சாரணர்களும்‌ யக்ஷர்களும்‌, கின்னரர்களும்‌, அப்ஸரஸ்‌களும்‌ உல்லாசமாய்க் காலங்கழிக்குமிடம்.. அதன் நேர்கிழக்கில்   சிறந்ததான ஜலோதமெனும்‌ கடல்‌ உண்டு. அங்குதான் கோபமே உருவாய்க் கொண்ட  தணலைக்‌ கக்கும்‌ வடவாக்கினி என்ற குதிரையைக்‌ காண்பீர்கள்‌. உலகையே இரையாய்க்‌ கொள்ளும்‌ காலாக்னி அது. அவ்விடத்திலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் அலறிக் கொண்டிருக்கும் மிக அற்புதமாகக் காட்சி யளிக்கும்‌ பிரதேசம்‌ இது,


தொடரும்

 

 


எனது முதாலாவது  புத்தகம்

இராமாயணம் பால காண்டம் ஒரு பார்வை என்ற நூலை  பெங்களூர் புஸ்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. 150 பக்கங்கள் விலை Rs.170.  pustaka.co.in என்ற  வலைத்தளத்தில் தேடுபொறியில் எனது பெயர் R.Seshadrinathan ஆர்.சேஷாத்ரிநாதன் என்று கொடுத்து தேடினால் மற்ற விவரங்கள் கிடைக்கும். அல்லது புத்தகம் வேண்டுவோர் நிறுவனத்தின் whatsApp எண் 7418555884 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.







Friday, August 18, 2023

 

எனது இரண்டாவது புத்தகம்

இராமாயணம் அயோத்தியா காண்டம் கம்பர் - பாகம 1 ஐ பெங்களூர் புஸ்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. 197 பக்கங்கள் விலை Rs.220.  pustaka.co.in என்ற  வலைத்தளத்தில் தேடுபொறியில் எனது பெயர் R.Seshadrinathan ஆர்.சேஷாத்ரிநாதன் என்று கொடுத்து தேடினால் மற்ற விவரங்கள் கிடைக்கும். அல்லது புத்தகம் வேண்டுவோர் நிறுவனத்தின் whatsApp எண் 7418555884 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.




Sunday, April 16, 2023

 

பொன்னியின் செல்வன்

(ஆர். சேஷாத்ரிநாதன்)

 

 

 

பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படம் வெளிவரப்போகிறது. இதன் முதல் பாகம் வெளியானபோது புற்றீசல்போல நூற்றுக்கணக்கான காணொளிகள் வெளிவந்து சோழ வரலாற்றைச் சொல்லுகிறோம் என்று மக்களைக் குழப்பிகொண்டிருந்தன.  இவற்றுள் எந்தக் காணொளிகள் சரியான விவரங்களைத் தெரிவிக்கின்றன என்று கண்டுபிடிப்பது மிகக் கடினம்.

 

சோழர் வரலாற்றின் அதாரிட்டி

நீல கண்ட சாஸ்த்ரி,

சதாசிவ பண்டாரத்தார்,

இராஜமாணிக்கனார்

ஆகியோர் எழுதிய புத்தகங்கள் தான். இதைத்தான்  அப்பொழுதே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் ஒரு நாவல். சோழர்களின் உண்மையான வரலாற்றுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்று. கிட்டத்தட்ட பதினாறு பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள். ஆனால் பலர் வந்தியத் தேவன் சென்ற பாதையில் நாங்களும் சென்று பார்க்கிறோம் என்று சென்றனர். உண்மையான சோழர் வரலாற்றில் வந்தியத்தேவனைப் பற்றி பெரிதாகக் குறிப்பிடப்படவில்லை.   இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஆதித்ய கரிகாலனைச் சதி செய்து கொன்றதாக நாவலில்  சொல்லப்படும் கடம்பூர் மாளிகையைத் தேடி பலர் சென்றனர்.  அவர்கள் சென்ற இடங்களில் ஆளாளுக்கு ஒரு சில இடங்களைக் காட்டி அந்த மாளிகை இங்குதான் இருந்தது என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர்.உண்மையில் அப்படி ஒரு சதி நடந்ததாக சோழ வரலாற்றில் எந்தவித ஆதாரங்களும் இல்லை.

 

 கல்கியின் நாவலில் ஆதித்ய கரிகாலனைப் பதவிக்கு வராமல் தடுக்கும் நோக்கத்துடன் பழுவேட்டரையருடன் ஒரு சில சிற்றசர்கள் சதி செய்வது போல் ஒரு பகுதி வரும்.  அதில் அவர்கள் ஆதித்ய கரிகாலன் காஞ்சியில் தங்க மாளிகை கட்ட பணத்தை செலவு செய்வதை விரும்பாததாக அவர்களுடை உரையாடல் இருக்கும்.  இதன் அடிப்படையிலேயே  நிறையப்பேர் ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டதன் காரணம் என்ன? என்று பல காணொளிகள வெளியிட்டு குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.  அப்படி என்றால் ஆதித்ய கரிகாலனைக் கொன்றது யார்? முடிசூடி இருபது ஆண்டுகள் கழித்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்படும் நபர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடையார்குடி கல்வெட்டில் பதிவு செய்தது ஏன். உண்மையான கொலையாளிகள் யாராக இருக்கக்கூடும். அவர்கள் கொலை செய்ததின் காரணம் என்ன? எப்படி திட்டமிட்டிருக்க முடியும். போன்ற பல விவரங்களை ஒரு கொலை வழக்கை ஒரு துப்பறியும் நிபுணர் எவ்வாறு ஆய்வு செய்வாரோ அவ்விதம் செய்து அதன் முடிவுகளை Pesu Tamizha Pesu  என்ற வலைத்தளத்தில் நேர் காணல் மூலம் இரண்டு காணொளிகல் மூலம் தெரிவித்துள்ளார் வரலாற்று  ஆய்வாளர்   Jeyasree Saraathan அவர்கள். இவர் சிறந்த வரலாற்று ஆய்வாளர்  இராமாயணம், மகாபாரதம் நிகழ்ந்த காலங்களை கணித்து தனது https://jayasreesaranathan.blogspot.com/ என்ற தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை  எழுதி உள்ளார். மற்றும் ஜோதிடம், வான சாஸ்திரம் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளார். அதில் தான் நான் மேல் சொன்ன சோழ வரலாற்றின் ஒரு பகுதியைச் சுவை பட எழுதி உள்ளார். கண்டிப்பாகப் படியுங்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் காமிக்ஸ் புத்தகங்களாக சிறுவர்களிடம் விநியோகம் செய்துள்ளதாக படித்தேன். எதிர்கால சந்ததியினர் அதுதான் உண்மையான சோழ வரலாறு என்று முடிவு செய்ய வாய்ப்புகள் உண்டு.