ராமாயணத்தில் விஸ்வாமித்திரர்
தாடகை வதம்
(ஆர். சேஷாத்ரிநாதன்)
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் . ராமாயணத்தில்
விஸ்வாமித்திரரின் பங்கு பற்றி சென்ற தொடரை எல்லோரும் படித்து இருப்பீர்கள் என
நினைக்கிறேன். அதன் தொடர்ச்சிதான் இந்த தாடகை வதம் என்ற தொடர். மீண்டும், இந்த
தொடர் வால்மீகி, கம்பர் துளசி தாசரின் இராமாயணங்களை
உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது. அதுபோக வேளுக்குடி, கம்பவரிதி ஜெயராஜ், கவிஞர் வாலி,
அருணாச்சல கவிராயர் ஆகியோரின்
கருத்துக்களும் இந்தக் கட்டுரையை அலங்கரித்துள்ளன. அவர்கள் எல்லோருக்கும் எனது
நன்றி. மொத்தத்தில் நான் பார்த்தது, படித்தது, கேட்டது எல்லாவும் இடம் பெற்றுள்ளன.
முனிவரும் அரச குமாரர்களும்
முனிவர் விஸ்வாமித்திரர் உலக நன்மைக்காக தான் செய்யும் வேள்விகளுக்கு
அரக்கர்கள் இடையூறு செய்கிறார்கள். அதைக் காக்க, கரிய செம்மல் ராமனைத் தன்னுடன்
அனுப்பவேண்டும் என்று மன்னவன் தசரதரிடம் கோரிக்கை வைக்கிறார். முதலில்
எதைக்கேட்டாலும் தருவதாகச் சொன்ன தசரதன், ராமன் வயதில் மிக சிறியவன் என்பதால்
தயங்குகிறார். இதனால் விஸ்வாமித்திரர் சினம் கொள்ள, குலகுரு வசிஷ்டர் தலையிட்டு,
மன்னரைச் சமாதானப்படுத்தி, ராமர் லக்ஷ்மணரை விஸ்வாமித்திரருடன் அனுப்பும்படி
சொல்ல, தசரதனும் சம்மதம் தெரிவிக்கிறார். சென்ற தொடரில் விஸ்வாமித்திரரின்
கோரிக்கையை, அருணாச்சலக் கவிராயர் பாடல் மூலம் மன்னருக்கு தெரியவைத்தது இடம் இடம்
பெறவில்லை . இதோ அந்த பாடல்
ராமனைத் தருவாய் - செகத்ரட்சக
ராமனைத் தருவாய் (ராம)
தாமதம் நீ செய்யாதே –தசரதா இப்போதே (ராம)
அரன்பக்கம் செல்வேன் அரிமுன்னே சொல்வேன்
இரண்டும் தப்பினால் உனைவிட் டெவரால் பகை வெல்வேன் (ராம)
. தாடகைப் பாவி தவிர்த்தாள் என் வேள்வி
பீடைவராமற் காத்தாற் பிழைக்குமென் ஆவி (ராம)
உம்பர் விசாரம் ஒழிக்க அந் நேரம்
சம்பர னைக்கொன்றாயே தயவாய் இந் நேரம் (ராம)
கோபத்தில் ருத்திரன் குருவிசுவா மித்திரன்
ஆபத்துக் காக்க வேணும் அதனால் உன் புத்திரன்
ராமனத்தருவாய் ..
மன்னன் முதலில் மறுக்க,
பிறகு வசிஷ்டர் மன்னரை சமாதானம் செய்வதைக் கவிராயர் இப்படிச் சொல்லி உள்ளார்.
மோசம் வராதைய்யா நான்’
சொன்ன வார்த்தை
மோசம் வராதைய்யா
கோசிகன் பின்னே ராமனைக்’
கூட்டிவிடுவாய் –சொன்னேன்
மோசம் வராதைய்யா
உப்பு நீர் மேகம் சேர்ந்தால்
உலகில் பிரவாகம்
அப்படி உன்மகனுக்கு
அடுத்ததே யோகம்
மறுவுண்டோ வதிஷ்டன் சொல்
வார்த்தை இரண்டோ
பொறுபொறு முளைப்பரைப்
புதைப்பாரும் உண்டோ
சோதிக்கவேண்டாம் நான்
சொன்னதே சீலம்
மோசம் வராதைய்யா நான்
சொன்ன வார்த்தை
குலகுருவின்
சொல்லைக்கேட்டு, தசரதன், ராமன் லக்ஷ்மணனை விஸ்வாமித்திரருடன் அனுப்புவதற்க்குச் சம்மதிக்கிறான். இங்கு தான் குலகுரு வசிஷ்டர்
ஒரு நல்லாசிரியராக தனது பங்கைச் சரிவரச் செய்கிறார். இதைத்தான் சைவ சித்தாந்தத்தில்
தூல அருந்ததி ரகசியம்/நியாயம் என்று சொல்கின்றனர்.
தூல அருந்ததி நியாயம்
“அம்மி
மிதித்து, அருந்ததி பார்த்து என்பது யாவரும் அறிந்த ஒன்று.எத்தனை பேர் அருந்ததி
நட்சத்திரத்தைப் பார்த்திருப்பார்கள்? இதனை விளக்குவதே தூல அருந்ததி
நியாயம். விண்ணிலுள்ள பிரகாசமற்ற அருந்ததி
நட்சத்திரத்தைப் பார்ப்பது எளிய செயலன்று. எனவே அருந்ததி நட்சத்திரத்தைக்
காட்டுவதற்காக அதன் பக்கத்திலுள்ள(சப்தரிஷி மண்டலம்) ஒரு
பிரகாசமான நட்சத்திரத்தைக் காட்டி இதுதான் அருந்ததி நட்சத்திரம்
என்று கூறுவர்.இந்த
நட்சத்திரத்தைக் கண்ட பின்னர் இது அல்ல அருந்ததி நட்சத்திரம் என்று கூறி அதன் அருகிலுள்ள
உண்மையான அருந்ததி
நட்சத்திரத்தைக் காட்டுவதுதான் தூல அருந்ததி நியாயம். தெரியாத விஷயம்
ஒன்றைக் கற்பிப்பதற்காகக் தெரிந்த விஷயம் ஒன்றை விளக்கி அதன் மூலம் தெரியாத விஷயத்தைக்
கற்றுக்கொடுப்பதைப் பற்றியே தூல அருந்ததி நியாயம் சொல்கிறது.”
கல்வியிலும்
இந்த தூல அருந்ததி முறை உண்டு.அதாவது ஆரம்பக்கல்வி போதிக்கும் ஆசிரியர் சில
ஆழமான/நுட்பமான விஷயங்களை சொல்லும்போது மாணவர்கள் குழப்பமடைவார்கள். அதனால்
அவர்களுக்கு மேலோட்டமாகத்தான் கற்றுத்தரவேண்டும். பிறகு அந்த மாணவன் அந்த விஷயத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டான், ஓரளவு வளர்ந்துவிட்டான் என்று தெரிந்த பிறகு அடுத்த நிலைக் கல்வியைக் கொடுக்கவேண்டும்.
மாணவனுக்கு நல்ல பக்குவம் வந்துவுடன் அந்த விஷயங்களை தெரிந்து கொள்ள/உயர்கல்வி
கற்க, ஆரம்பக் கல்விபோதிக்கும் ஆசிரியரே நல்ல
ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் கல்வி பயில அனுப்புவார், என்பதையே இந்த தூல
அருந்ததி நியாயம் தெரிவிக்கிறது. அடுத்த நிலைக்கல்வியை கற்பிக்க விஸ்வாமித்திரரே
சிறந்த ஆசிரியர் என்று கருதிய வசிஷ்டர், ராமரை அவருடன் அனுப்பியதன் மூலம் தனது
பணியைச் செவ்வனே செய்தார்.
ஒரு கேள்வி
இங்கு ஒரு
கேள்வி எழலாம். வலிமை மிகுந்த மன்னன்
தசரதன் வேள்வியைக்காக்க தான் வருவதாக முன்வந்தபோது விஸ்வாமித்திரர் மறுத்த காரணம்?
ராம
அவதாரத்தின்படி, ராமர் மூன்று பெண்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அந்த மூன்று பெண்கள் தாடகை, அகலிகை மற்றும் சீதை. தாடகையை அழிக்கவேண்டும்;
அகலிகைக்கு சாபவிமோசனம் கொடுத்து, கல்லாய்க் கிடந்தவளை உயிர்ப்பித்து மீண்டும்
கௌதமரிடம் ஒப்படைக்கவேண்டும்; அன்னை சீதையின் கரம் பிடிக்கவேண்டும். தசரதர்
வந்தால் இந்த பணிகள் நடை பெறமுடியாதே? விஸ்வாமித்திரர் ராம அவதாரம் பற்றி
தெரிந்தவராதலால் தசரதன் தன்னுடன் வரச்
சம்மதிக்காமல் ராமனை அழைத்துச் சென்றார்.
இங்கு கம்பர்,
எல்லோருக்குமே ஒரு செய்தி சொல்வதாக திரு கம்பவாரிதி ஜெயராஜ் சொல்கிறார். அதாவது இனத்தின் அடிப்படையில் தமிழில்
எழுத்துக்கள் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. அதாவது உயிர் எழுத்து ஆண் இனம். மெய்
எழுத்து பெண் இனம். பெண்கள் நெற்றியில் போட்டுவைப்பதுபோல மெய்யெழுத்துக்களுக்கும்
மேலே புள்ளி இருக்கும். உடலுக்கு (மெய்க்கு ) தனி இயக்கம் கிடையாது. உயிரோடு(உயிர்)
இணைந்தால்தான் இயக்கம் நடக்கும். உருவம் உள்ள மெய்க்கு உருவம் இல்லாத உயிர்
வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சீராக இருக்கும். மெய் எழுத்து (பெண்) மூன்று
வகைப்படும். வல்லினம், மெல்லினம், இடையினம். அதுபோல பெண்களை மூன்று வகைப்படுத்தலாம். ஆண்களுக்கு
நிகரான வலிமை உள்ளவள் வல்லினம். மெல்லிய தன்மை கொண்டவள் மெல்லினம். இடைப்பட்டவள்
இடையினம். வல்லினத்தை அழித்துவிடு. இடையினத்தை காப்பாற்றி ஒதுங்கி விடு.
மெல்லினத்தை ஏற்றுக்கொள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதே இங்கு மறைபொருள். .
இங்கு தாடகை வல்லினம். அகலிகை இடையினம். அன்னை சீதை மெல்லினம். தாடகையை அழித்து,
அகல்யையைக் காப்பாற்றி, சீதையைக் கைப்பிடிக்கவேண்டும் என்ற செய்தியை ராமனுக்குச் சொல்லத்தான், விஸ்வாமித்திரர் மூன்று பெண்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை தமிழின்
சிறப்பின் மூலம் கம்பர் நமக்கு
உணர்த்துகிறார்.
ராமர் விஸ்வாமித்திரரைப் பின் தொடர்தல்
இனி ராமர்
லக்ஷ்மணர் விச்வாமித்திரரை தொடர்ந்து செல்வதை, வால்மீகி, கம்பர் எப்படி
விவரிக்கின்றனர் என்று பார்ப்போம்.
வால்மீகி
विश्वामित्रो ययावग्रे ततो रामो धनुर्धर:।
काकपक्षधरो धन्वी तं च सौमित्रिरन्वगात्।।1.22.6।
कलापिनौ धनुष्पाणी शोभमानौ दिशो दश ।
विश्वामित्रं महात्मानं त्रिशीर्षाविव पन्नगौ।।1.22.7।।
अनुजग्मतुरक्षुद्रौ पितामहमिवाश्विनौ।
तदा कुशिकपुत्रं तु धनुष्पाणी स्वलङ्कृतौ।।1.22.8।।
बद्धगोधाङ्गुलित्राणौ खड्गवन्तौ महाद्युती ।
कुमारौ चारुवपुषौ भ्रातरौ रामलक्ष्मणौ ।।1.22.9।।
अनुयातौ श्रिया दीप्तौ शोभयेतामनिन्दितौ।
स्थाणुं देवमिवाचिन्त्यं कुमाराविव पावकी ।।1.22.10।।
வில்லும், அம்புராத்துணியுடன்
ராமரும் லக்ஷ்மணரும் மூன்று தலையுடைய இரண்டு நாகங்கள் போவதுபோல விஸ்வாமித்திரரைப் பின்தொடர்ந்தனர். பிரமனைத்தொடரும் அஸ்வினி குமரரர்கள் போல, சிவனைத் தொடரும்
ஸ்கந்தன் போல, பத்து திக்குகளும் பிரகாசிக்கச் சென்றனர் என்று வால்மீகி
கூறுகிறார். இதே கருத்தை கம்பரும் சொல்கின்றார்.
வென்றி வாள் புடை
விசித்து, மெய்ம்மைபோல்
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு
குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான். 20
அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென,
சொன்ன மா தவன் - தொடர்ந்து, சாயைபோல்,
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான். 21
ராமன் கிளம்பிய
முறையை வர்ணித்த கம்பன், லக்ஷ்மணனுக்கென்று தனியாக ஏதும் சொல்லாமல் அன்ன
தம்பியும் தானும்’ என்று நிழல்போல ராமனைத் தொடர்ந்தான் என்று சொல்லுகிறான்.
துளசிதாசரும்,
ராமனின் அழகை வர்ணித்து விஸ்வாமித்திரருடன் கிளம்பிய விவரத்தை கீழே சொல்லுகிறார்.
சிங்கம் போன்ற நடை, சிவந்த கண்கள், விரிந்த நெஞ்சு, திரண்ட புஜங்கள், கரிய மேனி,அழகிய
கைகளில் வில்லையும் அம்பையும் சுமந்து
செல்வதாக சொல்லுகிறார்.
पुरुष सिंह दोउ बीर हरषि चले मुनि भय हरन।
कृपासिंधु मतिधीर अखिल बिस्व कारन करन॥208 ख॥
अरुन नयन उर बाहु बिसाला। नील जलज तनु स्याम तमाला॥
कटि पट पीत कसें बर भाथा। रुचिर चाप सायक दुहुँ हाथा॥1॥
ஆனால் தாடகை சுபாஹு
வதத்தை வால்மீகி கம்பர் போல விரிவாகச் சொல்லாமல் சுருக்கமாக முடித்துவிடுகிறார்
துளசிதாசர்.
இங்கு முனிவருடன்
ராமன் கிளம்பியதை கவிஞர் வாலி அவர்கள் பாடுகிறார்.
கவிஞர் வாலியின்
வரிகள்
கமண்டலம் ஏந்தி
கௌசிகன் முன்செல்ல
காண்டீபம் ஏந்தி
இரு குமாரும்
பின்செல்ல
புண்ய
மூர்த்திகளின்
பொன் உடலைத்தொட்டு
கண்களில்
ஒற்றிக்கொண்டது காற்று
வாருங்கள் இப்போது
நாமும் விஸ்வாமித்திரர், ராமர் லக்ஷ்மணருடன் புறப்படுவோம்.
கானகம் நுழைதல்
மூவரும் சரயு
நதிக்கரையை அடைந்தனர். அப்போது விஸ்வாமித்திரர் ‘இவர்கள் ராஜகுமாரர்கள். அதிக
தூரம் நடந்து பழக்கப்படாதவர்கள். காலந்தவறாமல் புசிப்பவர்கள். இது கானகம் ஆதலால்
அவர்களுக்கு நிறையச் சிரமம் இருக்கும். அதனால் அவர்களுக்குப் பசி, தாகம், சிரமம் இவைகள்
இல்லாமல் செய்யவேண்டும்” என்று நினைத்துப் பலா, அதிபலா என்ற மந்திரங்களை உபதேசம்
செய்கிறார். அந்த மந்திரங்களினால் உண்டாகும் பலவிதப் பலன்களை அவர் பட்டியலிடுகிறார். “இந்த
மந்திரங்கள் பிரம்மாவால் ஸ்ரிஷ்டிக்கப்பட்டவை.
विद्याद्वयमधीयाने यशश्चाप्यतुलं त्वयि।
पितामहसुते ह्येते विद्ये तेजस्समन्विते।।1.22.18।।
प्रदातुं तव काकुत्स्थ सदृशस्त्वं हि धार्मिक।
இந்த இரண்டு மந்திரங்களையும் நீ
பெறத்தகுதியானவன்” என்று ராமரிடம் தெரிவிக்கிறார்.
நதியின் மறுபக்கம்
.அன்றைய இரவு
அவர்கள் அங்கு தங்கி மறுநாள் நதியைக் கடந்து
மறுபக்கம் சென்றனர். கங்கையும், சரயூ நதியும் ஒன்று சேருமிடம். அது ஒரு சோலை. அழகு
கொஞ்சம் அந்த இடத்தைப் பார்த்து ராமருக்கு மகிழ்ச்சி பொங்கியது. முனிவரிடம் அந்த
இடத்தைப் பற்றி விசாரித்தார். இங்குதான் குரு வசிஷ்டர் நம் நினைவில் நிற்கிறார்.
ராமன் அயோத்தி அரண்மனையிலேயே இருந்தவர். சிறுவன் என்பதால் வெளி உலக அனுபவம் இல்லை.
விஸ்வாமித்திரருடன் அனுப்பியதில் ராமனுக்கு வெளி உலகம் பற்றி தெரிய வாய்ப்புக்
கிடைத்தது. மற்றும், ராமன் இனி காடுகளில் தங்கப்போவதால் அவருக்கு இயற்கையோடு
இணைந்த கல்வி கிடைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
விஸ்வாமித்திரர்
அந்த சோலையின் வரலாறைச் சொல்ல ஆரம்பித்தார். ஒருசமயம் சிவபெருமான் தவத்தில்
இருந்தபோது மன்மதன் (காமன்) காமக் கணைகளை அவர்மீது வீசி தவத்திற்கு இடையூறு
செய்தான். இதனால் கோபமடைந்த சிவன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். அங்கங்களை
இழந்த காமன் அனங்கன் என்று அழைக்கப்பட்டு அந்த இடத்தை வால்மீகி அங்க தேசம் என்றழைக்க கம்பரோ காமன் ஆஸ்ரமம்
என்று அழைத்தார். ஒரு நாள் அங்கு தங்கிவிட்டு மறுநாள் கங்கையின் மறுபக்கம்
சென்றனர்.
தாடகாவனம்
அந்த இடம் ஒரு
பயங்கரமான காடு. அடர்த்தியான மரங்களும், கொடிய விலங்குகளும் காணப்பட்டன.
விஸ்வாமித்திரரிடம் அந்த இடத்தைப் பற்றி விசாரித்தபொழுது, அவர் “அந்த இடத்தில்
மலதம், கருஷம் என்ற தேவர்களால் உருவாக்கப்பட்ட செழிப்பான இரண்டு இடங்கள் இருந்தன.
வ்ருத்ரசூரன் என்றவனை இந்திரன் கொன்றதனால்
ஏற்பட்ட உடல் நோயை குணப்படுத்த அங்கு வந்து தங்கி இருந்ததாகவும் தான்
குணமடைந்ததால் அந்த இடத்தை நல்ல வளமான பிரதேசமாக மாற்றியதாகவும் சொன்னார். அதன் பிறகு சுந்தன் , என்ற யக்ஷன் சுகேதுவின்
மகளாகிய தாடகை என்ற ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அழகியைத் திருமணம் செய்துகொண்டான். அவளுக்கு மாரீசன் என்ற
மகன் இருந்தான். அவர்கள் அங்கிருந்தவர்களை துன்புறுத்தித் துரத்திவிட்டு, அந்த
இடத்தை வனமாக மாற்றிவிட்டனர். ஒரு முறை அங்கு அகத்தியர் தவம் செய்து
கொண்டிருந்தபோது சுந்தன், அவருடைய
தவத்திற்கு இடைஞ்சல்கள் செய்தான். கோபமுற்ற அகத்தியர், அவனைத் தனது தவ வலிமையால் எரித்துவிட்டார். இதனால் கோபமுற்ற
தாடகை, தனது புதல்வர்களுடன் அகத்தியரைக் கொல்ல வந்தபோது, அவர்கள் அனைவரையும் இப்போது இருக்கும் யட்ச தேகத்தை விட்டு அரக்கர்கள் உருவமடைய
சாபமிடுகிறார். அகஸ்தியரை ஒன்றும் செய்யமுடியாமல், அவர் வசிக்கும் தேசத்தை அழித்து
எல்லோரையும் கொன்று தின்று விடுகிறாள். இதனால் அங்கு யாருமே வராமல் கோரமான
நாடாகிவிட்டது. இந்த வனத்திற்கு தாடகா வனம் என்ற பெயர்” என்று சொல்கிறார்.
स्वबाहुबलमाश्रित्य जहीमां दुष्टचारिणीम्।
मन्नियोगादिमं देशं कुरु निष्कण्टकं पुन:।।1.24.30।।
அப்படிப்பட்ட
அரக்கியான தாடகையை எனது உத்திரவுக்குக் கட்டுப்பட்டு உனது சொந்த ஆற்றல் மூலம் கொல்ல
வேண்டும் என்று வால்மீகி சொல்கிறார்.
வாலியின் வரிகள்
அன்புள்ள ராமச்சந்திரா
அவளுக்கு முடிவுகாலமும்
ஆருயிர்க்கெல்லாம்
விடிவுகாலமும்
உன்னால்தான்
உண்டாகவேண்டும்
பாலைவனம்
இதே இடத்தைப் பற்றி கம்பர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். சரயூ
நதியைக் கடந்து முனிவருடன் அரசகுமாரர்கள் காலைவைத்த இடம் ஆளரவமின்றி ஒரு பாலைவனம் போல காட்சி
அளிக்கிறது. அதற்குள் நுழைந்தவுடன் ராமன்
கேட்கிறான்’ “ஸ்வாமி இதுவரை நாம் பார்த்த இடங்கள் எல்லாமே பசுமையாக இருந்தனவே.
இந்த இடம் மட்டும் ஏன் இப்படி வறண்டு ஒரே அனலாக இருக்கிறது” என்று. இங்கு திரு கம்ப
வாரிதி ஜெயராஜ் அவர்கள் ஒரு புதிய செய்தி சொல்லுகிறார். தமிழிலே
பெருங்காப்பியங்கள் இயற்றும் போது குறிஞ்சி, முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற
ஐந்து நிலங்களைப் பற்றிக் கண்டிப்பாகப் பாடவேண்டும் என்ற ஒரு விதி முறை உண்டு. அப்படிப்
பாடினால்தான் அது பெருங்காப்பியம் என்று ஏற்றுக்கொள்ளப்படும் . இங்குதான்
கம்பருக்கு ஒரு சிக்கல். காரணம், தமிழ் நாட்டில் அன்று பாலை என்று ஒரு நிலம்
இல்லாமல் இருந்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது. பிறகு கம்பர் எப்படி பாடுவார்? இந்தப் பாலைவனம் என்பது
இயற்கை நிலமல்ல. பாலை என்ற நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்ட சிலப்பதிகாரம் தான் சொல்கிறது. முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட
காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு
துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
(காடுகாண் காதை,
64-66)
என்று கூறுகிறது. மருதத்தில் மழை பொழியாவிட்டாலும்,
உழவர்கள் நீரைத்தேக்கிவைத்து அல்லது நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் அது பாலை ஆகாது. மேலும்
கடல் இருப்பதாலும் நீர்த்தாவரங்கள் இருக்கும். குறிஞ்சி, முல்லையில் நீரை தேக்கிவைக்கும் வசதி
இருக்காது.
இப்போது
பாலை நிலத்தை கம்பன் பாடவேண்டிய கட்டாயம். ராமாயணத்தில் கம்பன் பாடிய இடங்கள்
மூன்று. அயோத்தி, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை. இந்த மூன்று இடத்திலும் பாலையைப் பாடுகின்ற வசதி கம்பனுக்கு இல்லை. காரணம்
அயோத்தியில் தசரதன் அறவழியில் ஆட்சி புரிந்துவந்தான். ஆகையால் அங்கு குறித்தகாலங்களில்
தவறாமல் நல்ல மழை பெய்தது. அதனால் கம்பனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
கிஷ்கிந்தை மற்றும் இலங்கையில் முறையே வாலியும் ராவணனும் ஆட்சி புரிந்தனர். அவர்கள்
அறவழியில் ஆட்சி செய்யாவிட்டாலும் தேவர்களை மிரட்டியே ஆட்சி புரிந்தனர். மழைத்தெய்வமான
வருணன், வேறு வழியில்லாமல் மழை
பொழிந்துகொண்டிருந்தான். ஆகையால், மழை இல்லாமல் ஒரு இடத்தைக் காட்ட கம்பனுக்கு
சிரமமாய் இருந்தபடியால், இந்த இடத்தைப்(வால்மீகியின் தாடகா வனத்தை) பிடித்துக்கொண்டான்.
விஸ்வாமித்திரர் சொல்லுகிறார் ‘இது பாலைவனம் அல்ல. இந்த இடம் தாடகை என்ற
அரக்கியின் கட்டுபாட்டில் உள்ளது. சோலைவனமாக இருந்த இடம் இப்போது பாலைவனமாக ஆகிவிட்டது”
வாலியின் வரிகள்
கங்கையை நாவாயால்
கடந்தார்கள்
பாலைவனம் ஒன்று
கண்ணில் பட்டது – அங்கு
கண்ணும் சுட்டது
கால் வைத்த
மண்ணும் சுட்டது
அந்த இடத்தைப் பற்றி கம்பன்
தா வரும் இரு வினை
செற்று, தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே
கேடுகள் விளைவதற்கு காரணமான இரண்டு வினைகளையும் அழித்து நீக்கர்கரியமூன்று வகையான பகைகளின் அரண்களையும் வென்று முத்தியை அடைய விரும்புகிறவர்களின் மனத்தையும், பொன்னையும் விலையாகப் பெற்று போகத்தை விற்கும் பெண்களது மனத்தையும் போல பற்றற்று இருந்தது பாலை என்று பாடினார்
கொடிய வெப்பத்தைக்
கக்கும் அந்த பாலைவனத்தைப் பற்றி கம்பன் மிகச் சிறப்பாகப் பாடியுள்ளான். குளிர்ந்த
அரண்மனையில் வசித்த இளம் ராஜகுமாரர்கள்
இந்த வெப்பத்தைத் தாங்க மாட்டார்கள் என்று
கருதி அவர்களுக்கு பலா, அதிபலா என்ற மந்திரங்களை இங்கு உபதேசித்ததாக கம்பர்
சொல்லுகிறார். அந்த மந்திரங்களை கேட்ட மாத்திரத்தில் அந்த இடத்தில் வெப்பம்
குறைந்தது என்று கம்பன் சொல்லுகிறான்.
வடமொழியில் காப்பியங்கள் இப்படித்தான்
பாடவேண்டும் என்ற விதிமுறைகள் உண்டா என்று தெரியவில்லை? மேலும் வால்மீகி ஒரு
முனிவர். உள்ளது உள்ளபடி சொல்பவர். அவரை எந்தக் கட்டுப்பாடுகளும் ஒன்றும்
செய்யமுடியாது. ஆதலால் வால்மீகிக்கு கம்பரைப் போல பாடவேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்திருக்கலாம் .
மேலும் அங்கு சரயு, கங்கை போன்ற நதிகள்
இருந்தன. ஆதலால் அவர் வனம் என்று பாடிவிட்டார். இங்குதான் கம்பனின் புத்திசாலித்தனம் தெரிகிறது.
एतत्ते
सर्वमाख्यातं यथैतद्दारुणं वनम्।
यक्ष्या चोत्सादितं सर्वमद्यापि न निवर्तते।।1.24.32।।
வால்மீகி கோரமான நாடு என்ற சொன்ன இடத்தைப் பாலை என்று சொல்லி அதனைப் பாடுகிறான்...
வாலியின் வரிகள்
அரசகுமாரர்களே!
அற்றை நாளில் இது
வாய்க்காலும்
ஏர்க்காலும்
வலம் வந்த நிலம்
அகத்தை அடக்கிய
அகத்திய முனிவர்
தவம் செய்த தலம்
அழகிய நிலத்தை
அழுக்கு நிலமாக
ஆக்கியவள் தாடகை
வால்மீகி, தாடகை எல்லோரையும் அழித்ததால்
யாரும் வராமல் வனம் வளம் இழந்தது என்று சொல்கிறார். கம்பரோ தாடகை இடைவிடாது
அழித்துக்கொண்டே இருந்ததால் அந்த இடம் பாலை ஆயிற்று என்கிறார்
ராமர் தாடகையைப்பற்றி விசாரிக்கிறார் அதற்கு விஸ்வாமித்திரர் சொல்வதாவது.
வாலியின் வரிகள்
பெண் இனத்தில் அவள்
மெல்லினமும் அல்ல
இடையினமும் அல்ல
வல்லினம் மனம்
கல்லினம் குணம்
அவள் பொய்யினம்
தாடகை இங்குதான்
சஞ்சரிக்கிறாள்
கண்ணில் தென்படுவோரை
சங்கரிக்கிறாள்
மனிதன் அவளுக்கு மதிய உணவு
அவன் செந்நீர் அவளுக்கு
பருகும் தண்ணீர்
பிணங்களே அவளுக்கு பஞ்சுமெத்தை
நிணங்களே அவள்
நீண்டகூந்தலுக்கு பூசும் நெய்
உதிர்த்த தலைகளை
மாலையாகவும்
உரித்த தோல்களை
சேலையாகவும் உடுத்துகிறாள்
பல்லுயிரையும் படாதபாடு
படுத்துகிறாள்
தாடகை வருகை
இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே நிலம்
அதிர்ந்தது. மானிடர்களின் வாசனையைப் பிடித்தே, இன்று நல்ல விருந்து கிடைத்தது என்று
எண்ணி புயல் போல கிளம்பி வந்து கொண்டிருந்தாள்
தாடகை . கையில் திரிசூலம், இடையில் யானைகளைக் கோர்த்து அணியப்பட்ட ஒட்டியாணம்,
சிறு சிறு மலைகளான பரல்களுடன் கூடிய
சதங்கைகளை கால்களில் அணிந்து தாடகை வந்து
கொண்டிருந்தாள். அவள் வரும் வேகத்தில் மலைகளும் பின்தொடர்ந்தன. யமனும் ஓடி
ஒளிந்துகொண்டான். அவள் வரும் வேகத்தைக் கம்பர் ஒரு அசைபோடும் சந்தப்பாடலால்
பாடுகிறார்.
கடம் கலுழ் தடங்
களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும்,
யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி
ஆர்த்தாள். 3
கண்ணை மூடிக்கொண்டு
நல்ல இசையுடன் சொல்லி பாருங்கள். தாடகை நேரில் வருவது போன்று இருக்கும்.
வாலியின் வரிகளில்
கௌசிக முனிவன்
இவ்வாறு’
கூறி முடிக்கையில்
குன்று அதிர்ந்தது
எங்கும் கானல்
அடர்ந்தது
கருத்த வானம்
வெளிறியது
கூகை வாய்விட்டு
அலறியது
தாடகை வந்தாள் சூல்
தடக்கை தாங்கி
நின்றாள்
மானிடரைக் கண்டதும்
கர்ஜித்தாள்
கெட்ட
வார்த்தைகளால்
அர்ச்சித்தாள்
நாயகன் ராமன்
நடுமுள் நடுங்காத
துலாக்கோல் போல்
நின்றான்
இவள்தான் தாடகை
தாடகையைப்பற்றி
விஸ்வாமித்திரர் சொல்வதாக கம்பர் சொல்கிறார் ‘அவள் பெண் உருக் கொண்டவள்தான்
என்றாலும் பூமியையே பெயர்த்தேடுக்கவும், கடல் நீரை முழுவதுமாக அள்ளிப் பருகவும்,
வானை முட்டி இடிக்கவும் வல்லமை படைத்தவள். மலைகளைப்போன்ற தனங்களும், நஞ்சு உமிழும்
கண்களும், இடிபோன்ற ஆரவாரக்குரலும், ஊழித்தீ போன்ற செம்பட்டை மயிரும், இருபிறை
போன்ற கோரப் பற்களும்,கடல் எழுந்து நடப்பது போன்ற உருவமும் கொண்டவள் என்று வர்ணிக்கிறார்.
தாடகையின் தோற்றத்தையும், சீற்றத்தையும் வர்ணிக்கும் இடங்களில் எல்லாம் கம்பன் வன்சொற் றோடராலேயே
முழுச் செய்யுளையும் அமைத்துள்ளான் என்று சி.
கணபதி அவர்கள் எழுதியுள்ளார்
இறைக்கடை துடித்த
புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள். 30
தாடகையைக் கண்டதும்,
முனிவர் ராமனிடம் ‘ராமா நான் சொன்ன தாடகை இவள்தான். வித்தியாசமில்லாமல்
எல்லோரையும் கொன்று புசித்துக்கொண்டிருப்பவள்.
வாலியின் வரிகள்
அன்புள்ள ராமச்சந்திரா
அவளுக்கு முடிவுகாலமும்
ஆருயிர்க்கெல்லாம்
விடிவுகாலமும்
உன்னால்தான்
உண்டாகவேண்டும்
கொடியவள் கொல்லப்படவேண்டியவள்.
உடனே அம்பை விடு என்று சொல்கிறார்.
ராமனின் திகைப்பு
ராமனோ ஒரு கணம்
திகைத்தான். அவனுக்கு தனது குரூ வசிஷ்டர் சொன்ன ‘மாதரையும் தூதரையும் கொல்லாதே’
என்ற சொன்ன அறிவுரைகள் நினைவிற்கு வந்தன.
அண்ணல் முனிவற்கு
அது கருத்து எனினும், 'ஆவி
உண்'
என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
'பெண்' என
மனத்திடை பெருந்தகை நினைந்தான். 35
முனிவருடைய கருத்து
தாடகையைக் கொல்லவேண்டும் என்றாலும், பெருந்தகை ராமன். “என்ன இருந்தாலும் அவள் ஒரு
பெண்” என்று நினைத்து அம்புதொடுக்காமல் திகைத்து நின்றான். இங்கு தான் ராமனின் கம்பீரம் ஆரம்பம்.
ராமனின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட விஸ்வாமித்திரன், ‘ராமா யாது என்று எண்ணுவது? இக்
கொடியாளையும், மாது என்று எண்ணுவதோ?
இவளைப் பெண் என்று நினைக்காதே. இந்த உலகத்தையே சுருட்டித் தனக்குள் வைத்துக்கொண்டவள்
இவள் என்றதும், எங்களை எப்படி விட்டு வைத்துள்ளாள் என்று எண்ணுகிறாயா? நாங்கள்
தவத்தாலும் விரதத்தாலும் ஊன்வற்றி இளைத்தவர்கள் ஆதலின் சாரமற்றவர்கள் (கோது) என்று
எங்களை ஒதுக்கிவிட்டாள். பற்பல உயிர்களையும் கொன்று தின்பவள். அவளைக் கொல் என்று முனிவர்
சொன்ன பிறகும் ராமன் மீண்டும் மௌனமாக
இருந்தான்.
முனிவர் “இவள் பெண்ணல்ல
இவளிடம் இரக்கம் காட்டக்கூடாது” என்று சொல்லியும் ராமன் தயக்கம் காட்டுகிறான்.
மேலும் முனிவர் ராமரிடம் ‘உன்னைத்தான் முதன் முதலில் பெண்ணை வதம் செய்யும்
முறையற்ற காரியத்தைச் செய்யச் சொல்வதாக எண்ணாதே. பெரியவர்கள் பலரும் அதைச்
செய்துள்ளனர். இந்திரன் மந்தரையைக் கொன்றான். மகாவிஷ்ணு பிருகு மனைவி, ப்ரஹஸ்பதியின் தாயார் காவ்யமாதாவை வதம்
செய்தார். பரசுராமர் தனது தாயையே வதம் செய்தார். ஆதலால் இதை அருவருப்பாக
நினைக்காதே என்று சொன்னார்.
விஸ்வாமித்திரர்
மேலும் ‘ராமா இவளையும் எமனையும் ஒப்பிடமுடியாது. ஒருவனின்
விதி முடிந்தால் தான் யமன் அவன் உயிரைப் பறிப்பான். ஆனால் இவளோ மனித வாசனை
உணர்ந்ததுமே உயிரைப் பறிப்பாள்” என்றார்.
சாற்றும் நாள்
அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்
அப்படியும் ராமன்
மௌனம் சாதித்தான்.
(விஸ்வாமித்திரர்
கேட்கிறார் “நாற்றத்தை உணர்தலும் தின்ன விரும்புகின்ற யமன் உண்டோ?” நாம் வாசனை
நுகர்தல் என்று படித்துள்ளோம் .கேட்டுள்ளோம். நாற்றம் கேட்டல் என்று கேள்விபட்டதே
இல்லை. புலன் இந்திரியங்களின் செயல்பாடு தூரத்தைப் பொறுத்தது. தூரத்தில்
பார்க்கும் பொருள் அருகில் வந்தவுடன்தான் வாசனை தெரியவரும். தாடகை தூரத்தில்
உள்ளபோதே வாசனையை நுகர்ந்துவிடுவாள் என்று
ஒரு சாராரும் விஸ்வாமித்திரர் பயம் மிகுதியால் வாய்க்குழறி நாற்றம் கேட்டலும்
என்றுசொல்லிவிட்டார் என்று மற்றொரு சாராரும்
சொல்லுகின்றனர்.)
தொடரும் குழப்பம்
ராமனுக்குச் சற்றுக்
குழப்பம். குரு வசிஷ்டர் மாதரைக் கொல்லாதே என்றார். இவரோ கொல் என்கிறார். ராமனின் குழப்பத்தைப் புரிந்துகொண்ட விஸ்வாமத்திரர்,
ராமரிடம், ‘ராமா வசிஷ்டர் பெண்ணைக்
கொல்லாதே, அது தர்மமாகாது என்று சொன்னாரே.
பெண் என்பவள் யார் என்று சொன்னாரா? அல்லது நீ வினவினாயா? ஒரு பொருளின் குணத்தை
வைத்துத் தான் அதன் பொருள் அறியப்படும். தர்மம் என்பது வெவ்வேறு நிலைகளில்
வெவ்வேறு பொருள் படும். வடிவத்தை வைத்து ஒரு பொருளின் குணம் அறியப்படுவதில்லை.
பெண் என்றால் பெண்மை நிறைந்தவள். ஆக பெண்ணைக்கொல்லாதே என்றால் பெண்மையோடு
இருக்கும் பெண்ணைக் கொல்லாதே என்ற பொருளே
தவிர உருவத்தை வைத்து முடிவு எடுக்கவேண்டிய விஷயம் அல்ல. ஒரு செயல் தர்மமா அதர்மமா என்பது உருவத்தை
வைத்தோ செயலை வைத்தோ தீர்மானிக்காமல் அந்த
செயலைச் செய்பவனின் எண்ணத்தை வைத்தே தீர்மானிக்கபடவேண்டிய விஷயம்” (உதாரணத்திற்கு ஒருவனைக் குத்திக் கிழிப்பது
என்பது அதர்மமான செயல் மட்டுமல்ல சட்டப்படியும் தவறு. ஆனால் அதையே ஒரு ரணவைத்தியன்
செய்யும்போது அது நோயாளியைக் காப்பாற்றும் செயல் என்பதால் தர்மம் ஆகிறது
சட்டபடியும் சரியான செயல். ஆக செயலைப் புரிபவனின் எண்ணத்தைப் பொறுத்தே அச்செயல்
தர்மமா அல்லது அதர்மமா என்று தீர்மானிக்கப்பட முடியும்.)
“ராமா நான் தருமத்தைக் கூறினேனே தவிர, இவள் மேல் உள்ள
கோபத்தால் இவளைக் கொல்லும்படிச் சொல்லவில்லை. இனியும் தாமதியாமல் உடனே இவளைக் கொல்வாயாக.”
என்று விஸ்வாமித்திரர் கூறினார்.
வாலியின் வரிகளில்
ஓ ராமா இவள் பெண்ணல்ல
பெண் உருக்கொண்ட பேய்
பேய்களுக்கேல்லாம் தாய்
காலும் கையும் முளைத்து
வந்த ஆலகாலம்
இவளைக் கொன்றால்
உன் புகழ் நிற்கும்
காலகாலம்
சிரஞ்சீவி ராமனே
தாடகையின் சிரம் சீவி
தர்மத்தைக்காப்பாய்
(இங்கு ஒரு கேள்வி எழலாம். தவ வலிமை நிறைந்த விஸ்வாமித்திரால்
அந்த அரக்கர்களை அழித்து வேள்வியைக் காப்பாற்றிக்கொள்ள இயலாதா? இப்போது கேள்விக்கு வருவோம். தவ வலிமை
மிகுந்த விஸ்வாமித்திரரே அரக்கர்களை அழித்து இருக்காலாமே. ஏன் ராமனை அனுப்பும்படி
கூறினார்? உண்மைதான். திரிசங்குவிற்காக புதிய ஸ்வர்க்கத்தையே படைக்கும் தவ வலிமை
கொண்டவர் விஸ்வாமித்திரர். அரசர்கள்
யாரும் அருகே இல்லை என்பதால், தனது தவத்தைக் கலைத்த தாடகையின் கணவனான சுந்தனை
எரித்தார் அகத்தியர். தாடகை குடும்பத்தினரை அரக்க்கர்களாகும்படி சபித்தார். அப்படி
தவ வலிமை படைத்தவர்கள் முனிவர்கள். அப்படி இருக்கும்போது ராமனை அனுப்பிவைக்கும்படி
கோரியதன் காரணம் என்ன?
இதனை விளக்க வால்மீகி கூறுவதவாது ‘நான்கு
வர்ணத்தவர்களின் நலனுக்காக அரசர்கள் இத்தகைய காரியங்களை செய்யவேண்டியது வரும்.
மக்களையும், துறவிகளையும் காப்பதற்காகக் கொடிய செயல்களையும் பழி வரக்கூடிய
செயல்களையும், பாவங்களையும் செய்தே தீரவேண்டும். ஆளப்பிறந்தவர்கள் எப்போதும்
இயற்றவேண்டிய அறம் இது, அறத்தை நிலைபெறுத்த மறத்தை விலக்குவதே
முறை என்று காரணம் கூறுகின்றார்.
नृशंसमनृशंसं वा प्रजारक्षणकारणात्।
पातकं वा सदोषं वा कर्तव्यं रक्षता सता।।1.25.17।।
राज्यभारनियुक्तानामेष धर्मस्सनातन:।
अधर्म्यां जहि काकुत्स्थ धर्मोह्यस्या न विद्यते।।1.25.18।।
கம்பரோ “கறங்கு
அடல் திகிரிப் படி காத்தவர் பிறங்கடைப் பெரியோய்! “ அரசகுமாரனே இது உன் கடமை என
உணர்த்துகிறார். “ பின்னும் ஈறு இல் நல்
அறம் பார்த்து இசைத்தேன்” என முனிவர் ஏவினார்
என்று கம்பர் உரைக்கிறார். ஆக இந்த வேலைகளை அரசர்கள் மட்டும்தான் செய்யவேண்டும்.
அதுபோக, அரசன் கடமையை முனிவன் ஆற்றினால் அவனது தவ வலிமை குறையும் என்பதை நன்கு
உணர்ந்தவர் விஸ்வாமித்திரர். அரசகடமையை அரசகுமாரனாகிய ராமன் செய்யப் புகழ் உண்டாகுமே
அன்றி பழி உண்டாகாது என்பதை “ஓது கீர்த்தி உண்டாயது அல்லால், இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்” என்று உணர்த்துகிறார்.
மேலும் பலா அதிபலா மந்திரங்களை உபதேசிக்கும்போதே வால்மீகி ராமரை நோக்கி
न सौभाग्ये न दाक्षिण्ये न ज्ञाने बुद्धिनिश्चये।
नोत्तरे प्रतिवक्तव्ये समो लोके तवाऽनघ।।1.22.15।।
முடிவு எடுப்பதில் உனக்கு இணையானவர் இந்த பூமியில் எவரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் ஆகவே ராமர் விரைந்து முடிவெடுக்கவேண்டும் என்று விரும்புகிறார்.
இறுதிச்சுற்று
ராமரும் மனம் இசைந்து “குருவே தாங்கள் பணிப்பது எதுவாயினும் அதனைச் செய்து முடிப்பது என் கடமை. வேதங்கள் செய் என்று சொல்வதை தாங்கள் செய்யாதே என்று சொன்னாலும் வேதங்கள் செய்யாதே என்பதை தாங்கள் செய் என்று சொன்னாலும் அதன்படி நடப்போம்”
ஐயன் அங்கு அது கேட்டு, 'அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!" என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு' என்றான்.)
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
தாடகை ராமரைத் தாக்க ஆரம்பித்தாள். இனியும் விட்டுவைக்கக்கூடாது என்று கருதிய ராமன் கருநிற தாடகை மீது அம்பை எய்தான்.
வாலியின் வரிகள்
அனந்த ராமன்
கைகளில் நாணேற்றி
கணையை வைத்தான்
அவன் கோபத்திற்கு
அணையை வைத்தான்
அவள் கல்மாரி
பெய்தாள்
ராமன் வில்
மாரி பெய்தான்
மாறி மாறி
மாரி பெய்ய
மந்திரம் ஓதி
மற்றொரு கணையை
மன்னவன் எய்ய
விழுந்தாள் தாடகை
எழுந்தது தர்மம்
-----
கலாநிதி முருகு
தயாநிதி
தொகுத்த
ராமர்
அம்மானையிளிருந்து
ஞானமுனி சொல்கேட்டு
நாராயணர் நடந்து
தோல்புரளும்
அம்பைத்தொடுத்து
மிகவாங்கி சென்று
நின்று
அப்போ ராமபாணம்
தொடுத்தார்
ஒன்றிரண்டு மூன்று
நாலைந்து துண்டாய்
விழுந்தாள்
ராமன் எய்த அந்த
அம்பு கல் போன்ற அவளது நெஞ்சில் புகுந்து
சுழன்று அற்பர்களுக்கு நல்லோர் சொன்ன அறிவுரை எப்படி ஒரு காதில் புகுந்து
மறு காது வழியாகப் போகுமோ அப்படிப்போனது என்று கம்பர் பாடுகிறார்.
சொல் ஒக்கும்
கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே
(மீண்டும்
கம்பரின் புலமை இங்கு வெளிப்படுகிறது. உவமானங்கள் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே.
இங்கு ராம பாணத்தின் வேகத்திற்கு, மின்னலைக்கூட உதாரணமாகச் சொல்லாமல், சொல்லை உதாரணமாகச் சொல்லுகிறார். அந்த காலத்தில்
குழந்தைகள் ‘ராமன் விட்ட பாணம் திரும்பி
பார்த்தா காணோம்” என்று விளையாடுவார்கள் . இன்னொரு உதாரணம் சொல்லலாம். இது கொரானா
நேரம். பத்து நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவன்
திடீரென்று தும்மல் போடுகிறான். போட்டுவிட்டு கண்திறந்து பார்க்கையில் நண்பர்கள்
ஒருவரையும் காணவில்லை..
தாடகையின் முடிவு
பிரளய காலத்தில் வீசுகின்ற
சண்ட மருதக்காற்றில் மோதி சிதைந்துபோகின்ற கரிய மேகம் போல அந்த அரக்கி ராமன்
தொடுத்த அம்பால் அடிபட்டு கீழே விழுந்தாள் . அவள் உயிர் நீங்கிய பிறகு அரக்க
வடிவம் நீங்கி முந்தைய வடிவம் பெற்று ராமனை வணங்கி நல்லுலகம் எய்தினாள் என்று ஆத்யாத்ம
ராமாயணம் கூறுகிறது. துளசிதாசரும் அதையே சொல்கிறார்.
चले जात मुनि दीन्हि देखाई। सुनि ताड़का क्रोध करि धाई॥
एकहिं बान प्रान हरि लीन्हा। दीन जानि तेहि निज पद दीन्हा.
ஆனால் வால்மீகி, கம்ப
ராமாயணங்களில் அப்படிச் சொல்லப்படவில்லை. தாடகை இறந்தவுடன், தேவர்கள் மனம்
மகிழ்ந்து விஸ்வாமித்திரரிடம் தெய்வீக ஆயுதங்களை ராமருக்கு வழங்கும்படி பணிக்கின்றனர்.
விஸ்வாமித்திரரும் அவ்வாறே செய்கிறார். இங்கு மீண்டும் நல்லாசிரியர் வசிஷ்டர்
மீண்டும் நம் நினைவுக்கு வருகிறார். அவர் பரிந்துரை செய்ததால்தானே தசரதர் ராமரை
முனிவருடன் அனுப்பச் சம்மதித்தார். தெய்வீக ஆயுதங்கள் கிடைத்தன. ராவணனுடன் பின்னால்
நடத்தப்போகும் போருக்கு ஒரு பயிற்சிப் போராக தாடகை வதமும் அமைந்தது. ஆகையால்
வசிஷ்டர் ஒரு நல்லாசிரியரே..
இங்கு சில விஷயங்களைக்
குறிப்பிட வேண்டும்.
வால்மீகி ராமாயணத்தில் தாடகையின் பிள்ளை மாரீசன் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுபாஹு ஒரு மகன் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால்
கம்ப ராமாயணத்தில் கம்பர் தாடகையின் புதல்வர்கள் மாரீசன், சுபாகு என்று
குறிப்பிட்டுள்ளார்.
வால்மீகி ராமயணத்தில்
விஸ்வாமித்திரர் தசரதரிடம் “மாரீசனும் சுபாஹுவும் என்ற அரக்கர்கள் தனது யாகத்தைக் கெடுப்பதாக சொல்லி இருக்கிறார். கம்பரோ அவர்கள் பெயரைக் குறிப்பிடாமல் நிருதர்கள்
என்றே சொல்லுகிறார்.
இங்கே இப்போது ஒரு கேள்வி
எழுகிறது. வால்மீகி. கம்பர் இருவருமே விஸ்வாமித்திரர் தசரதனிடம் தாடகையைப்பற்றிக் குறிப்பிடாமல்
இருந்ததன் காரணம் என்ன என்று தெரியப்படுத்தவில்லை.
தசரதர் சிறுவன் ராமரை அவ்வளவு சுலபமாக அனுப்பிவிடமாட்டார்
என்று விஸ்வாமித்திரருக்குத் தெரியும். சுபாஹு, மாரீசன் இருவரோடு தாடகை என்ற
அரக்கியிடமும் யுத்தம் செய்ய வேண்டும் என்று சொன்னால் கண்டிப்பாக அனுப்பமாட்டார்.
மேலும் ஒரு நல்ல யுத்தவீரன் ஒரு பெண்ணைக் கொல்லத் தயங்குவான். அதுவும் ஒரு வீரன் தனது கன்னிப்போரில்
ஒரு பெண்ணுடன் போர் புரிய விரும்ப மாட்டான். இதனால்தான் முனிவர் தசரதனிடம் இந்தப் பேச்சை எடுக்கவில்லை போலும்.
தாடகையைக் கொல்லும்
விவகாரத்தில் முதலில் முனிவர் சொல்வதைக் கேட்பதாகச் சொன்னாலும் ராமருக்கு “இவள்
பெண்ணாயிற்றே. இவளைக் கொள்ளாமல் இவள் அங்கங்களை வெட்டிவிட்டால் இவளால் முன்பு போல
இயங்கமுடியாதே.’ என்று அவள் மீது இரக்கப்பட்டு அவளுடைய அங்கங்களை வெட்டிவிடுவதாக
வால்மீகி சொல்கிறார். ஆனால் கம்பர் அப்படிச் சொல்லவில்லை. இனி முடியாது என்ற நிலை
வந்தபோதுதான் அவர் தாடகையைக் கொல்கிறார். ஆக ஒரு எதிர்கால அரசன் என்ற முறையில்
ராமர் அவசர முடிவெடுக்காமல் கூடிய மட்டும் பெண்ணைக் கொல்லக் கூடாது என்ற உறுதியான
மனநிலையில் இருந்தது அவருடைய உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது. அதேநேரம் ஆபத்தில்
உள்ளவர்களை காப்பாற்ற வேண்டியது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதையும் தெரிந்து
அதன்படி செயல் பட்டார்.
எல்லோருக்கும் நன்றி.
அடுத்து அகலிகை சாப விமோசனம்
1 comment:
super mika nanraka aayvu seythu ezuthappatta katturai. vazththukkal. menmelum pala aayvuk katturaikalai ezutha vaazththukiren.
nagarajan
Post a Comment