Sunday, April 16, 2023

 

பொன்னியின் செல்வன்

(ஆர். சேஷாத்ரிநாதன்)

 

 

 

பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படம் வெளிவரப்போகிறது. இதன் முதல் பாகம் வெளியானபோது புற்றீசல்போல நூற்றுக்கணக்கான காணொளிகள் வெளிவந்து சோழ வரலாற்றைச் சொல்லுகிறோம் என்று மக்களைக் குழப்பிகொண்டிருந்தன.  இவற்றுள் எந்தக் காணொளிகள் சரியான விவரங்களைத் தெரிவிக்கின்றன என்று கண்டுபிடிப்பது மிகக் கடினம்.

 

சோழர் வரலாற்றின் அதாரிட்டி

நீல கண்ட சாஸ்த்ரி,

சதாசிவ பண்டாரத்தார்,

இராஜமாணிக்கனார்

ஆகியோர் எழுதிய புத்தகங்கள் தான். இதைத்தான்  அப்பொழுதே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் ஒரு நாவல். சோழர்களின் உண்மையான வரலாற்றுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்று. கிட்டத்தட்ட பதினாறு பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள். ஆனால் பலர் வந்தியத் தேவன் சென்ற பாதையில் நாங்களும் சென்று பார்க்கிறோம் என்று சென்றனர். உண்மையான சோழர் வரலாற்றில் வந்தியத்தேவனைப் பற்றி பெரிதாகக் குறிப்பிடப்படவில்லை.   இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஆதித்ய கரிகாலனைச் சதி செய்து கொன்றதாக நாவலில்  சொல்லப்படும் கடம்பூர் மாளிகையைத் தேடி பலர் சென்றனர்.  அவர்கள் சென்ற இடங்களில் ஆளாளுக்கு ஒரு சில இடங்களைக் காட்டி அந்த மாளிகை இங்குதான் இருந்தது என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர்.உண்மையில் அப்படி ஒரு சதி நடந்ததாக சோழ வரலாற்றில் எந்தவித ஆதாரங்களும் இல்லை.

 

 கல்கியின் நாவலில் ஆதித்ய கரிகாலனைப் பதவிக்கு வராமல் தடுக்கும் நோக்கத்துடன் பழுவேட்டரையருடன் ஒரு சில சிற்றசர்கள் சதி செய்வது போல் ஒரு பகுதி வரும்.  அதில் அவர்கள் ஆதித்ய கரிகாலன் காஞ்சியில் தங்க மாளிகை கட்ட பணத்தை செலவு செய்வதை விரும்பாததாக அவர்களுடை உரையாடல் இருக்கும்.  இதன் அடிப்படையிலேயே  நிறையப்பேர் ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டதன் காரணம் என்ன? என்று பல காணொளிகள வெளியிட்டு குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.  அப்படி என்றால் ஆதித்ய கரிகாலனைக் கொன்றது யார்? முடிசூடி இருபது ஆண்டுகள் கழித்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்படும் நபர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடையார்குடி கல்வெட்டில் பதிவு செய்தது ஏன். உண்மையான கொலையாளிகள் யாராக இருக்கக்கூடும். அவர்கள் கொலை செய்ததின் காரணம் என்ன? எப்படி திட்டமிட்டிருக்க முடியும். போன்ற பல விவரங்களை ஒரு கொலை வழக்கை ஒரு துப்பறியும் நிபுணர் எவ்வாறு ஆய்வு செய்வாரோ அவ்விதம் செய்து அதன் முடிவுகளை Pesu Tamizha Pesu  என்ற வலைத்தளத்தில் நேர் காணல் மூலம் இரண்டு காணொளிகல் மூலம் தெரிவித்துள்ளார் வரலாற்று  ஆய்வாளர்   Jeyasree Saraathan அவர்கள். இவர் சிறந்த வரலாற்று ஆய்வாளர்  இராமாயணம், மகாபாரதம் நிகழ்ந்த காலங்களை கணித்து தனது https://jayasreesaranathan.blogspot.com/ என்ற தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை  எழுதி உள்ளார். மற்றும் ஜோதிடம், வான சாஸ்திரம் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளார். அதில் தான் நான் மேல் சொன்ன சோழ வரலாற்றின் ஒரு பகுதியைச் சுவை பட எழுதி உள்ளார். கண்டிப்பாகப் படியுங்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் காமிக்ஸ் புத்தகங்களாக சிறுவர்களிடம் விநியோகம் செய்துள்ளதாக படித்தேன். எதிர்கால சந்ததியினர் அதுதான் உண்மையான சோழ வரலாறு என்று முடிவு செய்ய வாய்ப்புகள் உண்டு.