Saturday, May 23, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 115

 

நேற்றைய தொடர்ச்சி

 

நண்பனின் துன்பத்தைக் கண்டு எவன் ஒருவன் தான் துன்புறுவதில்லையோ அவன் மகாபதகம் செய்தவன் ஆகிறான் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது

 

இங்கு ஒரு கேள்வி எழலாம். வாலிக்குச் சுக்ரீவன் தான் விரோதி. இராமன் விரோதி இல்லையே? இராமன் மீது வாலி இதுவரை எந்தவித நேரடி தாக்குதலும் நடத்தவில்லையே.? பிறகு ஏன் இராமன் வாலியை கொல்லுவேன் என்று சூளூரைக்கிறான்.? அதற்குச் சில காரணங்கள் உள்ளன. சுக்ரீவனுக்காக இராமன் கிஷ்கிந்தைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது தனது பாதுகாப்பிற்கு வாலி அச்சுறுத்தலாக இருக்கலாம் என இராமன் நினைத்தான்.

 

ஒன்று இராமனுக்குத் தெரியும் வாலி இராவணனின் நண்பன் என்று. அவர்களுக்குள் நட்புரீதியான உடன்பாடு ஒன்று உண்டு. அதாவது கிஷ்கிந்தை வழியாக எவரேனும் இலங்கைக்குள் நுழைந்து இராவணனைத் தாக்கினால் இராவணனை வாலி பாதுகாப்பான் என்பதாகும். இரண்டாவது இராமன் சுக்ரீவனைச் சந்தித்து வாலியைக் கொல்வதாக சுக்ரீவனுக்கு வாக்களித்த விவரம் அரசன் என்ற முறையில் ஒற்றர்கள் மூலம் வாலிக்குத் தெரியும். அதனால் இராமனையும் வாலி எதிரியாகவே கருதுவான். இராவணன் வாலிக்கு நண்பன் இராமனின் எதிரி. சுக்ரீவன்  இராமனுக்கு நண்பன் ஆனால் வாலியின் எதிரி, சீதையைத் தேடவேண்டும் என்றால் கிஷ்கிந்தையைக் கடந்து செல்லவேண்டும். ஆனால்  கிஷ்கிந்தைக்குள் காலடி எடுத்து வைப்பது இராமனுக்கு ஒரு அபாயகரமான விஷயம். 

 

ஒரு வேளை இராமன் வாலியிடம் நட்புக் கொண்டால், வாலி இராமனிடம் இலங்கைக்குச் செல்லும் காரணத்தைக் கேட்பான். இராவணின் நண்பன் என்ற முறையில் வாலி இராமனின் நோக்கத்தை ஒத்துக் கொள்ள மாட்டான். நண்பனுக்கு செய்துள்ள வாக்குறுதியை மீறி இராவணனுக்கு துரோகம் செய்ய மாட்டான்.

 

ஒரு வேளை  வாலி நடு நிலை வகிக்கிறான் என்று வைத்துக் கொண்டால் வாலி இராவணனுக்கு எதிராகப் போரிட மாட்டான். ஆனால் இராமனுக்கு இராவணனை எதிர்த்துப் போரிட ஒரு படை தேவை. ஆக வாலியைக் கொல்வதே  இதற்குத் தீர்வு என்று இராமன் கருதி சுக்ரீவனுக்கு வாக்களிக்கிறான்.

 

தொடரும்


No comments: